காவல் நிலைய வளாகத்திற்குள் போலீஸ் பைக்குகளுக்கு தீவைப்பு; அறந்தாங்கியில் பரபரப்பு!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் பேராவூரணி சாலையில் உள்ள காவல் நிலைய வளாகத்திற்குள் புகுந்து, நள்ளிரவில் 3 பைக்குகளுக்கு மர்ம நபர் தீ வைத்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரப்பரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்த காவல் நிலையங்கள்
அறந்தாங்கி பேராவூரணி சாலையில் டி.எஸ்.பி. அலுவலகம், சட்ட ஒழுங்கு காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம் என அனைத்தும் அடுத்தடுத்து இயங்கி வருகின்றன.
இதில் சட்ட ஒழுங்கு காவல் நிலையமும், போக்குவரத்து காவல் நிலையமும் ஒரே வளாகத்தில், வெறும் 5 மீட்டர் இடைவெளியில் அமைந்துள்ளன. இரு காவல் நிலையங்களுக்கும் ஒரே நுழைவு வாயில் வழியாகத்தான் செல்ல வேண்டும்.
3 பைக்குகள் சாம்பல்
நேற்று இரவு பணி முடிந்ததும் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் தங்கராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் பழனிச்சாமி ஆகியோரின் அரசு பைக்குகள் மற்றும் காவலர் குமாரராஜாவின் சொந்த பைக் ஆகிய 3 வாகனங்களும் வழக்கம்போல் காவல் நிலைய வாசலில் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில், இன்று அதிகாலை 4.40 மணி அளவில் வாசலில் நின்ற 3 பைக்குகளும் திடீரென தீப்பற்றி எரிந்தன. அருகில் உள்ள மகளிர் காவல் நிலையப் பணியாளர்கள் ஓடிவந்து தீயை அணைக்கப் போராடினர். முடியாததால், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தபோதிலும், 3 பைக்குகளும் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
சுற்றுச்சுவர் ஏறி தப்பியோட்டம்
சம்பவ இடத்திற்கு விரைந்த அறந்தாங்கி டி.எஸ்.பி. சார்லஸ் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டார். போக்குவரத்து காவல் நிலையத்தில் சி.சி.டி.வி. கேமரா இல்லாததால், சட்ட ஒழுங்கு காவல் நிலைய கேமராவை ஆய்வு செய்தனர்.

அதில், அதிகாலை நேரத்தில் உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர், இரு காவல் நிலைய வாசல்களுக்கும் இடையே சந்தேகத்திற்கிடமாக உலாவுவதும், பைக்குகளில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு பின்பக்க சுற்றுச்சுவர் ஏறி குதித்து தப்பியோடுவதும் பதிவாகியிருந்தது.
மக்கள் பீதி
கேமராவில் மர்ம நபரின் முக அடையாளம் தெளிவாகப் பதியாததால், நகரின் முக்கிய இடங்களில் உள்ள பிற சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஏற்கனவே நகரில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வரும் சூழலில், பாதுகாப்பு அரணாக விளங்க வேண்டிய காவல் நிலையத்திற்குள்ளேயே புகுந்து போலீசாரின் வாகனங்களுக்கே தீ வைக்கப்பட்ட சம்பவம் அறந்தாங்கி நகர மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


