தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவு; பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்றவர் கைது
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சால்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி குருவலட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
அதே பகுதியைச் சேர்ந்த சின்ன கெங்குராஜ் என்பவர் மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவருக்கும் குருவலட்சுமிக்கு இடையே கடந்த 5 ஆண்டுகளாகப் பழக்கம் ஏற்பட்டு பின்னர் திருமணம் மீறிய உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குருவலட்சுமியின் கணவருக்குத் தெரிய வர இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சில ஆண்டுகளாக குருவலட்சுமி கணவரைப் பிரிந்த வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், குழந்தைகள் வளர்ந்த நிலையில், அவர் மீண்டும் தனது கணவருடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சின்ன கெங்குராஜ், தொடர்ந்து குருவலட்சுமியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி காலை 9 மணியளவில், குருவலட்சுமியின் வீட்டுக்குச் சென்ற சின்ன கெங்குராஜ், அவருடன் தகராறு செய்து தாக்கியுள்ளார். மேலும், குருவலட்சுமி வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை குருவலட்சுமி மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுவிட்டார். இதில் 45 சதவீதம் தீக்காயமடைந்த குருவலட்சுமி சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதுகுறித்து பசுவந்தனை போலீஸார் முதலில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து சின்ன கொங்குராஜைக் கைது செய்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த குருவலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கைக் கொலை வழக்காக மாற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


