கொல்கத்தா: ஹோட்டலில் அதிகாலையில் தீவிபத்து; சிகிச்சைக்கு வந்த 9 வங்கதேசத்தினர் பலியான சோகம்
கொல்கத்தாவில் உள்ள ப்ரீ ஸ்கூல் தெருவில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை 2 மணிக்குத் திடீரென தீப்பிடித்துக்கொண்டது.
மிகவும் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் இத்தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்து குறித்து கேள்விப்பட்டதும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
அடர்த்தியான புகையால் தீயணைப்பு வீரர்கள் படிக்கட்டுகளில் ஏறி மேல் தளங்களுக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் ஹோட்டலுக்குள் சிக்கிய சிலரைப் பத்திரமாக மீட்டனர்.
ஆனாலும், தீவிபத்தில் சிக்கி ஒரு குழந்தை உட்பட ஒன்பது பேர் இறந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
தீவிபத்து ஏற்பட்டபோது அனைவரும் உறங்கிக்கொண்டிருந்ததால் அவர்களால் உடனே தப்பிக்க முடியாமல் போய்விட்டது.
ஏர் கண்டிஷனர் வெடித்ததால் தீ ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் சரியான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இறந்த அனைவரும் பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தா வந்து ஹோட்டலில் தங்கி இருந்தார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் இது போன்ற ஒரு தீவிபத்து மேற்கு வங்கத்தில் நடந்தது. மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள ஹோட்டலில் இரண்டு நாட்களுக்கு முன்பு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. கடந்த 17ம்தேதி அதிகாலையில் தாராபித் நகரில் உள்ள ஹோட்டல் பிதேஷினியில் ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது எட்டு பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.
தாராபித் கோயிலின் புனித குளத்திற்கு அருகில் இருக்கும் ஐந்து மாடிகளைக் கொண்ட ஹோட்டலின் தரை தளத்தில் அதிகாலை 4:30 மணியளவில் பெரும்பாலான விருந்தினர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது தீப்பிடித்தது.
தீவிபத்தில் மேகாலயாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 5 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். ஹோட்டலின் மேல் தளத்தில் குடும்பம் தங்கியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீப்பிடித்ததை உணர்ந்த அவர்கள், குழந்தைகளுடன் சேர்ந்து ஓட முயன்றனர், ஆனால் கீழே இறங்க முயன்றபோது தீயில் சிக்கிக்கொண்டனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


