கரூர்: மர்மமான முறையில் தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு; உறவினர்கள் தர்ணா! - போலீஸார் விசாரணை

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், போத்து ராவுத்தன்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பாலசுப்பிரமணியம் என்பவர் பணியாற்றி வந்தார். பாலசுப்பிரமணியம், தனது மனைவி நீலவேணி மற்றும் 16 வயது மகள்கள் துர்கா, புனிதா ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை பணிக்குச் சென்ற அவர் இரவு வரை வீடு திரும்பவில்லை.

தர்ணா

இதையடுத்து, அவரது உறவினர்கள் அவரை தேடிச் சென்றபோது, ஊராட்சி அலுவலக வளாகத்தில் ரத்தக்காயங்களுடன் அவர் மர்மமான முறையில் சடலமாக இறந்து கிடந்தது தெரியவந்தது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தோகைமலை காவல் நிலைய போலீஸார் பாலசுப்பிரமணியத்தின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு மேற்கொள்வதற்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவரது மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும், குடும்பத்தினருக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும், மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

protest

இதையடுத்து, சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த டி.எஸ்.பி ராஜேஷ்குமார் மற்றும் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களின் தொடர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாலசுப்பிரமணியத்தின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தூய்மைப் பணியாளர் ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.