‘வெள்ளைக் கொடி காட்டுங்கள்’ ஈரானிடம் ட்ரம்ப் கேட்கிறார்; ஆனால், ஓமனுடன் புது பிளானில் ஈரான்!
கடந்த ஜூன் 17-ம் தேதி, அமெரிக்கா, ஈரான் இடையே போர் நிறுத்தம் சம்பந்தமான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அந்த ஒப்பந்தத்தில் 60 நாள்களுக்குப் போர் நிறுத்தம். இந்தச் சமயத்தில் இரு நாடுகளும் அணு ஆயுதம், ஹார்முஸ் நீர்ச்சந்தி, மத்திய கிழக்குப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பேசி முடிவுக்கு வர வேண்டும் என்று அந்த ஒப்பந்தம் கூறியது.
நேற்றுடன் (ஆகஸ்ட் 17) 60 நாள்கள் முடிந்துவிட்டது. இந்த 60 நாள்களில் இரு தரப்பிற்கும் பேச்சுவார்த்தை நடந்ததோ, இல்லையோ, மோதல் போக்கு நடந்தது. அது இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இந்த நேரத்தில் ஈரான் போர் சுற்றியும், ஹார்முஸ் நீர்ச்சந்தி சுற்றியும் என்னென்ன நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன...
இன்னும் நிலைப்பாட்டில் இருந்து மாறாத ட்ரம்ப்
நேற்று தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “ஈரானால் எந்த வகையிலும், எந்த வடிவத்திலும் ஓர் அணு ஆயுதத்தைப் பெறவே முடியாது என்பதுதான் எங்கள் முதன்மையான இலக்கு.
எப்போதும் அதுவேதான் எங்களின் ஒரே இலக்காகவும் இருக்கும்” என்று பதிவிட்டிருக்கிறார்.
இந்தப் போர் தொடக்கத்திற்கு முன்பும் சரி... பின்னும் சரி... ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது என்பதில் ட்ரம்பும், அமெரிக்காவும் தெளிவாக இருக்கிறார்கள். அதில் ஏதும் இப்போது வரை மாற்றமில்லை.
ஈரான் - ஓமன் கூட்டு!
ஈரான் மற்றும் ஓமனின் எல்லையில் ஹார்முஸ் நீர்ச்சந்தி விரிந்திருக்கிறது. இதனால், இரு நாடுகளும் இந்த நீர்ச்சந்தியின் போக்குவரத்தைத் தங்கள் கட்டுக்குள் கொண்டுவர ஏதோவொரு வரைவுத் திட்டம் தீட்டியிருக்கிறது.
இந்த வரைவுத் திட்டம் குறித்து, “இரு கடலோர நாடுகளின் இறையாண்மை உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், வணிகக் கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தையும் உறுதி செய்வதற்காக ஒரு நடைமுறை உருவாக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்” என்று ஈரான் சொல்கிறது.
ஆனால், ஹார்முஸ் நீர்ச்சந்தி என்பது உலகத்தின் பொதுச்சொத்து. அதை இரு நாடுகளும் சொந்தம் கொண்டாட முயற்சிக்கின்றன.

ஓமனை மிரட்டும் ட்ரம்ப்...
அமெரிக்காவின் நட்பு நாடுகளில் ஒன்றுதான் ஓமன். ஆனால், தற்போது ஈரானுடன் சேர்ந்து ஹார்முஸைக் கையகப்படுத்த பிளான் செய்கிறது.
அதுவும் ட்ரம்ப் ஹார்முஸ் நீர்ச்சந்தியை அமெரிக்காவின் பிராந்தியம் ஆக்குவேன் என்று கூறிய பிறகும்.
இதனால், ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு நேற்று அளித்த பேட்டியில் ட்ரம்ப், “ஓமான் மட்டும் குறுக்கே வந்தால், அவர்களைத் தரைமட்டமாக்கிடுவோம்” என்று எச்சரித்திருக்கிறார்.
ஈரான் வெள்ளைக்கொடி - ட்ரம்ப் எதிர்பார்ப்பு
வருகிற நவம்பர் மாதம், அமெரிக்காவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இதில் வாக்குகள் சிதறிப்போகலாம் என்ற எண்ணத்தில் ட்ரம்ப் விரைவில் இந்தப் போரை முடித்துவிடுவார் என்கிற பேச்சுகள் எழுந்து வந்தன.
ஆனால், இந்தப் பேச்சுகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ட்ரம்ப் நேற்று ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்குக் கொடுத்த பேட்டியில்,
“ஐந்து மாதங்களாக நடைபெற்று வரும் அமெரிக்க-இஸ்ரேல் போரில் ஈரான் வெள்ளைக்கொடியை உயர்த்த வேண்டும்.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் (IRGC) எனது நிர்வாகம் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த ஒரு ரகசிய வழியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தப் போரை முடிக்க எனக்கு எந்த நேரக் கெடுவும் இல்லை. நான் அவசரப்படவும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.
ஆக, ட்ரம்ப் தேர்தலைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்பதை இந்தப் பேச்சு காட்டுகிறது.
ஈரான் ‘ரெடி’ மோடு
60 நாள்கள் போர் நிறுத்தம்... காலக்கெடு முடிந்துவிட்டது. ஆனாலும், எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால், ட்ரம்ப் அட்டாக் மோடில் இருக்கிறார்.
ஈரானும் சும்மா இருக்கவில்லை. ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்குக் கொடுத்துள்ள தகவலில் ஈரான், “அமைதி ஒப்பந்தத்தைச் செயல்படுத்த அமெரிக்காவிற்கு ‘சில வாரங்கள் மட்டுமே அவகாசம்’ அளித்திருந்த தெஹ்ரான் ஈரான் அரசு, தன் தற்காப்புக் கொள்கையிலிருந்து விலகி ‘முழுமையான தாக்குதல்’ கொள்கைக்கு மாறுகிறது.

ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் தோற்றால், ஹார்முஸ் நீர்ச்சந்தியிலும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியத்திலும் பதற்றத்தை அதிகரிக்க அனைத்து ஈரானிய அமைப்புகளும் தயார்நிலையில் வைக்கப்படும்.
அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையைத் தொடர்ந்து நீட்டிப்பைக் கொண்டுசெல்வதை ஈரான் வேடிக்கை பார்த்துக்கொண்டு காத்திருக்காது” என்று தெரிவித்துள்ளது. ஆக, ஈரானும் சரி... அமெரிக்காவும் சரி... இப்போதைக்கு வெள்ளைக்கொடியைக் காட்டப்போவதில்லை.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
