உயிரோடிருப்பவருக்கு போலி இறப்புச் சான்றிதழ்; சொத்தை அபகரிக்கவா? - கலெக்டர் காலில் விழுந்த மூதாட்டி

மதுரை மாவட்டம் சிக்கந்தர் சாவடி முனியாண்டி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பிள்ளை இவரது கணவர் மூர்த்தி சில ஆண்டுகளுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில் தனது இரண்டு மகன்கள் மருகளுடன் வசித்து வந்துள்ளார்.

இவரது இளைய மகன் பெருமாளுக்கும் அவரது மனைவி சுந்தரி என்பவருக்கும் விவகாரத்து வழக்கு நிலுவையில் இருந்துவந்த நிலையில் பெருமாள் கடந்த மார்ச் மாதம் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து மூர்த்தியின் பெயரில் வங்கியில் அடகு வைத்திருந்த நகையை மீட்பது தொடர்பாக முத்துப்பிள்ளை கேட்டபோது வங்கி அதிகாரிகள் முத்துப்பிள்ளை உயிரிழந்துவிட்டதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த முத்துப்பிள்ளை வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது பெருமாளின் மனைவி சுந்தரி பெயரில் முத்துப்பிள்ளை இறந்தவிட்டதாகக் குறிப்பிட்டு வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அதில் பூரண சந்திரன், பாண்டிச்செல்வி, முனீஸ்வரி, தமிழ்செல்வி வேல்முருகன் பிச்சையம்மாள் ஆகியோரின் சாட்சி கையெழுத்துடன் கிராம நிர்வாக அலுவலர் பெயரில் வழங்கியுள்ளனர்.

இது குறித்து முத்துப்பிள்ளை விஏஓ அலுவலகத்திற்குச் சென்று விஏஓ மற்றும் கிராம அலுவலக உதவியாளர் ஆகியோரிடம் கேட்டுள்ளார்.

முத்துப்பிள்ளை

அப்போது இதனை யாரிடமும் சொல்ல வேண்டாம் எனக் கூறி அவரை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து அங்கு பேச்சுவார்த்தை நடத்தி இது தொடர்பாக சுந்தரி மீது மட்டும் புகார் அளிக்க வேண்டும் மற்றவர்களுக்கு இதில் தொடர்பு இல்லை எனக் கூறி கடிதம் எழுதி வாங்கியுள்ளனர்.

இந்த நிலையிலும் தனது மகனுக்குச் சொந்தமான நிலம் மற்றும் நகைகளை அபகரிப்பதற்காகச் சிலர் தூண்டுதலின் பேரில் தன்னை உயிரிழந்து விட்டதாக இறப்புச் சான்றிதழ் கொடுத்து ஏமாற்றிவிட்டனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் தனது உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டதாகக் கூறி முத்துப்பிள்ளை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து குறைதீர்க் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணாவைச் சந்தித்து மனு அளித்ததோடு அவரது காலில் விழுந்து எப்படியாவது இதன் மீது நடவடிக்கை எடுங்கள் எனக் கூறினார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

இது குறித்து முத்துப்பிள்ளை பேசும்போது, “கணவர் இல்லாமல் இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்தோம். இளைய மகனுக்குத் திருமணமான நிலையில் இளைய மகன் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக உயிரிழந்து விட்டார். அதுவே எனக்கு சந்தேகமாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது நானும் இறந்து விட்டதாக வி.ஏ.ஓ மற்றும் தலையாரி இருவரும் சேர்ந்து சாட்சிகளுடன் வாரிசு சான்றிதழ் ஒன்றைத் தயாரித்துக் கொடுத்துள்ளனர்.

நான் மிகுந்த அச்சத்தில் உள்ளேன். எனவே அதிகாரிகள், எனது மருமகள் சுந்தரி மற்றும் இதுபோன்று பொய் சாட்சியில் கையெழுத்து போட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

முத்துப்பிள்ளை
முத்துப்பிள்ளை

முத்துப்பிள்ளையின் மூத்த மருமகள் பேசிய போது, “முத்துப்பிள்ளை உயிரிழந்து விட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பின்புதான் எங்களுக்குத் தெரியும். இது தொடர்பாக விஏஓ மற்றும் தலையாரிடம் கேட்டபோது எங்களுக்குத் தெரியாது எனக் கூறிவிட்டனர்.

இது தொடர்பாக அங்குள்ள அரசியல் கட்சியினர்  சிலர் எங்களை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுந்தரி மீது மட்டும் வழக்கு புகார் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

"தினசரி பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய நபரை நேரில் அழைத்து விசாரிக்காமல் எப்படி கிராம நிர்வாக அலுவலரும் உதவியாளரும் இது போன்ற இறந்ததாகக் கூறி வாரிசு சான்றிதழ் வழங்கினார்கள்? 

இது போன்ற மோசடியில் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என உறவினர்கள் தெரிவித்தனர்.

மதுரையில் உயிருடன் இருக்கக்கூடிய மூதாட்டியை உயிரிழந்து விட்டதாக வாரிசு சான்றிதழ் வழங்கி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.