Dhruv Vikram: நாம் உண்மையோடு இருந்தால்... - சமூக வலைத்தள விமர்சனங்கள் குறித்து துருவ் விக்ரம்
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் விமர்சனங்கள் தொடர்பாக நடிகர் துருவ் விக்ரம் பேசியிருக்கிறார். இந்தியா டுடே ஊடகத்தின் தமிழ்ப் பதிப்பை இன்று தொடங்கியிருக்கிறார்கள்.
இந்தத் தொடக்க விழாவில் கலந்துகொண்ட நடிகர் துருவ் விக்ரம், கேள்விகள் சிலவற்றுக்குப் பதிலளித்தார்.
தொகுப்பாளர் அவரிடம், "உங்கள் திரைப்பயணத்தில், உங்களைப் போன்ற ஒரு நடிகரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், சொந்த விஷயங்களிலும் காட்டப்படும் தீவிரமான கவனம் மற்றும் விமர்சனங்களுக்குப் பழகிக்கொள்ள முடியுமா? இது உங்களை மனரீதியாகப் பாதிப்பதுண்டா?" எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதில் தந்த துருவ் விக்ரம், "இத்துறையை நாம் தேர்வு செய்யும்போதே, இத்தகைய விமர்சனங்களும் தீவிரமான கண்காணிப்புகளும் இதன் ஒரு அங்கமாகவே இருக்கும் என்பதை மிக ஆரம்பத்திலேயே நாம் புரிந்துகொள்கிறோம்.
இத்தொழில் எவ்வளவு அழகானது என்றாலும், இதில் பல பரிமாணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நாம் அவற்றை முழுமையாக ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால், உண்மையைச் சொல்லவேண்டுமெனில், இவை என்னை ஒருபோதும் பாதித்ததே இல்லை என்று கூறிவிட முடியாது.

நாம் யார், நமக்கான விஷயங்கள் என்ன என்பதில் தெளிவு வேண்டும். நமக்கு எது முக்கியமானது, நாம் நேசிக்கும் மனிதர்கள் யார் என்பதை அறிந்து அவர்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
நாம் உண்மையோடு இருக்கும்போதும், நம் எல்லை என்னவென்று நமக்குத் தெரியும்போதும், இந்த விமர்சனங்களால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது.
அந்த வகையில், கடந்த 7 - 8 ஆண்டுகால என் திரைப்பயணத்தில், எனக்கு எப்போதும் துணையாக நின்று ஊக்கமளிக்கும் ஒரு சிறிய நல்ல நட்பு மற்றும் ஆதரவாளர் வட்டம் அமைந்தது என் அதிர்ஷ்டம் என்றே கூறுவேன்," எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


