மகாராஷ்டிரா: சாலை இல்லாததால் உயிரிழந்த கர்ப்பிணி மனைவி; மக்களைத் திரட்டி சாலையமைத்த பழங்குடி கணவன்!
மகாராஷ்டிராவில் மலைப்பகுதியில் இருக்கும் கிராமங்களுக்குப் போதிய சாலை வசதி இல்லாமல் இருக்கிறது. அப்படியே சாலை வசதி இருந்தாலும் அவை மிகவும் மோசமாகச் சேதம் அடைந்து காணப்படுகிறது.
மகாராஷ்டிராவின் சந்திராப்பூர் மாவட்டம் மலைப்பகுதிகள் நிறைந்த இடம் ஆகும். இம்மாவட்டத்தில் தெலங்கானா எல்லைக்கு அருகில் உள்ள கோடாங்கப்பி என்ற கிராமத்தில் 20 குடும்பங்கள் வசிக்கின்றன.
இவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தபோதிலும் அங்கு அவர்களுக்கு அடிப்படை சாலை வசதி இல்லை. குண்டும் குழியுமாக இருக்கும் பாதை வாகனம் செல்லக்கூடிய அளவுக்கு இல்லாததால், மழைக்காலங்களில் மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுகின்ற்னர்.
மலைப் பாறை பாதையைக் கடக்க பொதுமக்கள் மிகவும் போராட வேண்டியிருக்கிறது. நோய் அல்லது மருத்துவ அவசரம் என்றால் கூட உடனே செல்ல முடியாத நிலை ஏற்படும்.
இதே கிராமத்தைச் சேர்ந்த துளசிராம் கெடம் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸை அழைத்தபோது சாலை வசதி இல்லை என்று கூறி வர மறுத்துவிட்டனர்.
இதனால் அவரது மனைவி சங்கீதா பிரசவத்தில் குழந்தை பெற்ற பிறகு பரிதாபமாக இறந்துபோனார்.
இதையடுத்து இருக்கும் மலைப்பாதையைச் சரி செய்து கொடுக்க வேண்டும் என்று துளசிராம் அரசிடம் முறையிட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், நாங்கள் சாலைக்காகப் பலமுறை மாவட்ட நிர்வாகத்தை அணுகினோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. என் மனைவியை இழந்த பிறகு, நாங்கள் காத்திருக்க முடியாது என்று முடிவு செய்தேன். என்னுடைய நிலையை இன்னொரு குடும்பம் அனுபவிக்கக்கூடாது என்று முடிவு செய்தேன். முதல்வரின் கிராமப்புறச் சாலைகள் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சாலை 1.5 கிமீ தொலைவில் நிறுத்தப்பட்டுவிட்டது.
நாங்கள் அசாதாரணமான எதையும் கேட்கவில்லை, எங்கள் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பாக வெளியுலகிற்குச் செல்ல ஒரு சாலை மட்டுமே கேட்கிறோம்" என்று துளசிராம் கூறினார்.
இதையடுத்து துளசிராம் தனது கிராமத்தை இணைக்கும் சாலையைச் சரி செய்யும் பணியைத் தானே தொடங்கினார். அவர் தனது கிராமத்து மக்களை ஒன்று சேர்த்துக்கொண்டு சாலையைச் சரி செய்யும் பணியை செய்து வருகிறார். உலக பழங்குடியினர் தினமான கடந்த 9ம் தேதி இப்பணியைத் தொடங்கினார். இப்போது 1.5 கிலோ சாலையில் பாதி வேலை முடிந்துவிட்டது. மகாராஷ்டிராவில் இப்போது மழை காலம் என்பதால் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.
துள்சிராம் தனது மனைவி இறந்த இரண்டு மாதத்தில் இந்தச் சாலையை அமைக்கும் பணியைத் தொடங்கினார். துளசிராமும், அதன் குடியிருப்பாளர்களும் சேர்ந்து கட்டும் சாலை வெறும் பயண இணைப்பு மட்டுமல்ல. இது சங்கீதா போன்றோரின் மரணங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யும் என்று கிராமவாசிகள் நம்புகிறார்கள் என்று துளசிராம் கூறினார்.
பீகாரில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி இறந்த பிறகு 22 ஆண்டுகள் தனியாகப் போராடி ஒரு மலைப்பாதையை தஷ்ரத் மாஞ்சி கட்டி முடித்தார். அது இப்போது துளசிராமின் செயலோடு ஒத்துப்போகிறது. ஆனால் துளசிராம் தனியாக சாலை அமைக்காமல் கிராம் மக்களைச் சேர்த்துக்கொண்டு சாலை அமைத்து வருகிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


