அம்மா யார் என்று தெரியாதவர்களே வந்தே மாதரத்தை எதிர்க்கிறார்கள் - கேரள துணைவேந்தர் பேச்சால் சர்ச்சை
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த நெய்யாற்றின்கரை குன்னத்துக்கால் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் சங்கல்பம் -2026 யுவசங்கமம் என்ற இளைஞர் மாநாடு சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெற்றது. இந்த மாநாட்டில் கேரள பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மோகனன் குன்னும்மேல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். பாரத மாதா உருவப்படத்திற்கு முன் குத்துவிளக்கேற்றி அந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் மோகனன் குன்னும்மேல். பின்னர் அந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய கேரள பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மோகனன் குன்னும்மேல், "அம்மா யார் என தெரியாதவர்கள் வந்தே மாதரத்தை எதிர்க்கிறார்கள். அம்மா யார் என்பதைத் தெரிந்தவர்கள் எப்போதும் வந்தே மாதரம் என்று போற்றுவார்கள். பாரதம் நமது தாய் என்பதால்தான் நாம் பாரத மாதா என்று அழைக்கிறோம், வந்தே மாதரம் பாடுகிறோம். படித்துப் பட்டம் பெற்ற பிறகு, அனைவரும் அரசுப் பணி தேர்வுகளுக்குப் பின்னால் ஓடும் போக்கு சரியானதல்ல. நீங்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்க வேண்டும். தற்போதைய சூழலில் பி.எஸ்.சி தேர்வு எழுதி மட்டுமே வேலை கிடைத்துவிடாது, அதற்கு இன்னும் சில விஷயங்களையும் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதுபோன்ற பிறரைச் சார்ந்திருக்கும் மனநிலையைக் கைவிட்டு, இளைஞர்கள் சுயமாகத் தொழில்களைத் தொடங்க முன்வர வேண்டும்.
உலகின் 60 சதவீத மருந்துகளை இந்தியாதான் உற்பத்தி செய்கிறது. வெளிநாட்டவருக்கு மருந்து தேவைப்பட்டால் அதை இந்தியாதான் தயாரிக்க வேண்டும் என்ற நிலை வந்துள்ளது. சிறுவயது முதலே குழந்தைகளுக்குக் கல்வி வழங்குவதற்காகத்தான் தேசியக் கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டது. இதில் 3 வயதுக் குழந்தைகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நான்கு ஆண்டு பட்டப்படிப்பு கல்வி முறையைக் கேரளத்தில் செயல்படுத்த விடமாட்டோம் என்று கூறினார்கள். ஆனால், கேரள பல்கலைக்கழகத்தில் நான் அதைச் செயல்படுத்தினேன். தற்போது அனைவரும் அதை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்” என்றார்.

அம்மா யார் என்று தெரியாதவர்கள்தான் வந்தே மாதரத்தை எதிர்க்கிறார்கள் என்ற துணைவேந்தரின் பேச்சு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இவை துணைவேந்தர் பதவியின் கண்ணியத்திற்குப் பொருந்தாத வார்த்தைகள் என சி.பி.எம் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. துணைவேந்தர் மோகனன் குன்னும்மேலின் விவாத பேச்சுக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் பல்கலைக்கழகத் தலைமையகத்தை நோக்கி இன்று பேரணி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


