லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கியவருக்கு சிறந்த பணிக்கான விருது; ராமநாதபுரம் நகராட்சி சர்ச்சை!

நாட்டின் 80 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவின்போது அரசு பணிகளிலும், பொது சேவைகளிலும் சிறந்த பணியாற்றியவர்களுக்கு சிறந்த பணிக்கான விருதுகளும் சான்றிதழ்களும் வழங்குவது வழக்கம். ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டு சிறந்த பணிக்கான சான்றிதழ்கள் நகராட்சி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது.

நகராட்சி தலைவர் கார்மேகம், நகராட்சி பொறுப்பு ஆணையர் சுகுமாறன் ஆகியோர் சிறந்த பணிக்கான சான்றிதழ்களை நகராட்சி ஊழியர்களுக்கு வழங்கினர். இதில் நகராட்சியின் வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் என்பவருக்கும் சிறந்த பணிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர் மீது ராமநாதபுரம் லஞ்ச ஊழல் ஒழிப்பு துறையினர் கணக்கில் வராத பணத்தை வைத்திருந்ததாக  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திகேயன்

கடந்த ஜூலை மாதம் 3ம் தேதி ராமநாதபுரம் நகராட்சியில் லஞ்ச ஊழல் ஒழிப்பு துறை டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது கணக்கில் வராத 3 லட்சத்து 60 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இங்கு வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வரும் கார்த்திகேயன் என்பவரின் வங்கி கணக்கில் கடந்த 3 ஆண்டுகளில் ஜி பே மூலம் சுமார் 25 லட்ச ரூபாய் பண பறிமாற்றம் நடந்திருப்பதும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து முறைகேடான வழியில் பணம் பரிமாற்றம் நடந்ததாக கார்த்திகேயன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தொடர் விசாரணை நடந்து வரும் நிலையில் கார்த்திகேயனுக்கு சிறந்த பணிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கியவருக்கு சிறந்த பணிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கு தகவல் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந் நிலையில், கார்த்திகேயனுக்கு வழங்கப்பட்ட சான்றிதழை திரும்ப பெற்றுவிட்டதாக  நகராட்சி பொறுப்பு ஆணையர்  சுகுமாறன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் நகராட்சியில் நடந்துள்ள இந்த கூத்து தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.