கர்நாடகா: மான் வேட்டையில் ஈடுபட்டதாக மூவரைச் சுட்டுக்கொன்ற வனத்துறை; காவிரி சரணாலயத்தில் பயங்கரம்

கர்நாடக மாநிலம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தைச் சேர்ந்த வனத்துறையினர் இன்று அதிகாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

ஹனூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுக்குள் வேட்டை கும்பலைச் சேர்ந்த 4 நபர்கள் நாட்டுத் துப்பாக்கிகளைக் கொண்டு மான்களை வேட்டையாடி இறைச்சியைத் தனித்தனியாகப் பிரித்துக் கொண்டிருந்துள்ளனர்.

இதனைக் கண்ட வனத்துறையினர் அவர்களைச் சுற்றி வளைத்துள்ளனர். ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு எச்சரித்துள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்டவர்கள்

ஆனால், வனத்துறையினரின் எச்சரிக்கையை மீறி வேட்டைக்காரர்கள் தப்பியோடும் நோக்கில் வனத்துறையினரை நோக்கி முதலில் துப்பாக்கியால் சுட்டதாகவும், அதில் சிவராஜ் என்ற வனத்துறை ஊழியர் காயமடைந்தாகவும் வனத்துறையினரால் கூறப்படுகிறது.

வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் தப்பியோடிய நிலையில் அந்த நபரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பேரும் கர்நாடகாவில் வாழ்ந்து வரும் தமிழ்நாட்டைப் பூர்வமாகக் கொண்டவர்கள் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் ஹனூர் பகுதியில் கடும் பதற்றம் நிலவுகிறது. உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஆத்திரமடைந்து ஹனூரில் உள்ள காவேரி வனவிலங்கு சரணாலய அலுவலகத்தைச் சேதப்படுத்தியுள்ளனர். அசம்பாவிதங்களைத் தடுக்க அந்தப் பகுதியில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்டவர்கள்
சுட்டுக்கொல்லப்பட்டவர்கள்

இது குறித்து தெரிவித்துள்ள கர்நாடக வனத்துறையினர், "மான் வேட்டை கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு வனத்துறை பதில் தாக்குதல் நடத்தியதில் அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் என்கிற லாசர் ஆகிய மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்தக் கும்பலைச் சேர்ந்த மஹிமதாஸ் என்ற மற்றொரு நபர் அடர்ந்த காட்டுக்குள் தப்பியோடிவிட்டார். அவரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது" என்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.