உன் வேலையை நேசி, கற்றுக்கொண்டே இரு என்று ரஜினி சார் சொன்னார் - ஸ்ரேயா சரண் ஷேரிங்
‘சிவாஜி’ திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் Pinkvilla ஊடகத்திற்குப் பேட்டி அளித்திருக்கிறார்.
அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் அவர், "ரஜினி சாரை நேரில் பார்த்தபோது பிரமிப்படைந்தேன். அவருடன் பணியாற்றுவது முதல் முறை என்பதால், பதற்றத்தில் உறைந்துவிடுவேனோ என்று பயந்தேன்.
அதனால் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைக்க ஷங்கர் சாரிடம் கேட்டுக் கொண்டேன். அதைக் கேட்டு அவர் சிரித்தார். ஷங்கர் சார், ‘ரஜினி சாரைச் சந்தியுங்கள்’ என்று சொன்னதைக் கேட்டதும் ஆச்சரியப்பட்டேன்.
அந்த நேரத்தில் ‘வாஜி வாஜி’ பாடலுக்கான ஒத்திகையும் படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்தது. படப்பிடிப்பின்போது, ரஜினி சார் என்னை இயல்பாக உணர வைத்தார்.
என் நெருங்கிய நண்பரைப் போலவே என்னிடம் பழகினார். அந்தப் படத்தில் மிகவும் சுவாரஸ்யமான மனிதர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம். ரஜினி சார் மிக மிக எளிமையானவர்.

படப்பிடிப்புத் தளத்துக்கு வரும்போது, எல்லோரையும் சமமாகத்தான் நடத்துவார். அவருடன் அந்தப் படத்தில் பணியாற்றியது எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது.
அவர் ஏற்கெனவே சூப்பர்ஸ்டார். ‘உன் வேலையை நேசி, தொடர்ந்து கற்றுக்கொண்டே இரு’ என்று அவர் எப்போதும் என்னிடம் சொல்வார்" என்று பகிர்ந்திருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

