சென்னை மாநகராட்சி Vs முதல்வர் அலுவலகம்! - சொத்துவரியில் பின்வாங்கிய முதல்வர் அலுவலகம்; பின்னணி என்ன?

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடீரென மாற்றப்பட்ட சொத்துவரியால் லட்சக்கணக்கான சாமானிய நடுத்தர மக்கள் கொந்தளித்து போயிருந்தனர். அரசை நோக்கி கடும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தனர்.

Mayor Priya

திமுகவும் இந்த விவகாரத்தை கையிலெடுத்து களமாட ஆரம்பித்தது. உடனே சுதாரித்துக் கொண்ட சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சொத்துவரி மறுமதிப்பீட்டை தற்காலிமாக நிறுத்தி வைத்திருக்கின்றனர். மக்களின் தலையில் திடீரென இடியை இறக்கிய சொத்துவரி விவகாரத்துக்கு சென்னை மாநகராட்சிக்கும் முதல்வர் அலுவலகத்துக்கும் இடையே நடக்கும் பனிப்போர்தான் காரணமென கிசுகிசுக்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய உள்விவகாரங்கள் அறிந்த சிலர், ``தேர்தல் முடிவுகள் வெளியாகி தவெக அரசு அமைந்ததில் இருந்தே அரசுக்கும் சென்னை மாநகராட்சிக்கும் ஒத்துப்போகவே இல்லை. வழக்கமாக மாற்றுக்கட்சியினர் ஆட்சியை பிடித்தாலும் சென்னையின் மேயர் முதல்வரை சந்தித்து வாழ்த்து கூறுவார். ஜெயலலிதா - ஸ்டாலின் காலத்திலேயே அந்த மரபு இருந்தது. ஆனால், மேயர் பிரியா முதல்வர் விஜய்யை இன்று வரை சந்திக்கவில்லை. முதல்வர் அலுவலகமும் அவரின் பதவியேற்பு விழாவுக்கு கூட மேயரை அழைக்கவில்லை. அப்போதிருந்தே இருதரப்புக்கும் ஈகோ யுத்தம் தொடங்கிவிட்டது. அந்த ஈகோ யுத்தத்தால் பாதிக்கப்படுவது மக்கள்தான்.

Chennai Corporation

லிமிட்டெட் டெண்டர்களுக்கு இந்த அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் வார்டு அளவில் சிறிய பள்ளங்களை சரி செய்யும் பணிகளை கூட செய்ய முடியவில்லை. ஏற்கெனவே பணியை முடித்தவர்களுக்கு பில் க்ளியர் செய்ய முடியவில்லை. லிமிட்டெட் டெண்டர்களில் நிறைய குளறுபடி இருக்கிறது. கவுன்சிலர்கள் தொடங்கி கட்சிக்காரர்கள் வரைக்கும் கமிஷன் அடிக்கிறார்கள் என்றுதான் புதிய வரைமுறைகளை கொண்டு வந்திருக்கிறோம் என அரசு கூறுகிறது. சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலானோர் திமுகவை சேர்ந்தவர்கள்தான்.

கவுன்சிலர்களுக்கு ஆண்டுதோறும் தலா 60 லட்ச ரூபாய் வார்டு மேம்பாட்டு நிதியாக வழங்கப்படும். அந்த தொகுதி மேம்பாட்டு நிதியை கூட இந்த முறை இன்னும் வழங்க முடியவில்லை. இதை முன்வைத்துதான் கடந்த ஜூலை மாத கவுன்சிலர்கள் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் கடும் வாதம் செய்தனர். கவுன்சிலர்கள் நிதியை விடுவித்தால் மக்களுக்கு திட்டங்களை செய்து திமுக நல்ல பெயரை எடுத்துவிடும் என இந்த அரசு பயப்படுகிறது. நிதியை கொடுக்காமல் எங்களை முடக்கி மழைக்காலத்தில் மக்கள் பணி செய்யவிடாமல் தடுத்து வீண் பழியை சுமத்தவும் அரசு தயாராகிறது என திமுக கவுன்சிலர்களும் மேயர், துணை மேயரும் சரமாரியாக குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

Mayor Priya
Mayor Priya

இதற்கு பதில் கூறி பேசிய ஆணையர் சமீரன், `மாநகராட்சி கடும் நிதிநெருக்கடியில் இருக்கிறது. 1927 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் கழித்து கவுன்சிலர் நிதி குறித்து யோசிக்கலாம் என நிதியை விடுவிக்க முடியாது என்று நாசூக்காக கூறினார். உடனே துணை மேயர் மகேஸ் குமார், `முதல்வரிடமும் நகராட்சி நிர்வாகத்துறையிடமும் பேசி மாநகராட்சிக்கென ஒரு சிறப்பு நிதியை கொடுக்க சொல்லுங்கள் என செக் வைத்தார். ஒரு மாதிரியாக காரசாரமாகத்தான் அந்த கூட்டமே நடந்து முடிந்தது. இந்த விவாதம் நடந்து பதினைந்தே நாள்களுக்குள் சொத்து வரி மறு மதிப்பீடு என பேரிடியை மக்கள் தலையில் இறக்கியிருக்கிறது மாநகராட்சி.

500 ரூபாய் சொத்து வரி கட்டி வந்த ஒருவருக்கு 7500 ரூபாய் வரியென மறு மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. கண்மூடித்தனமான சொத்து வரி உயர்வு இது. ஆணையர் சமீரன் நிதி கோரிக்கையோடு முதல்வர் கையில் வைத்திருக்கும் நகராட்சி நிர்வாகத்துறையை அணுகியதாகவும் முதல்வர் அலுவலகத்தை சேர்ந்த பவர்புல்லான அதிகாரி ஒருவர்தான் சொத்துவரியை மறுமதிப்பீடு செய்யும் ஐடியாவை கொடுத்ததாகவும் சொல்கின்றனர். அந்த அதிகாரி ஏற்கெனவே சென்னை மாநகராட்சி ஆணையர் பதவியில் இருந்தவர் என்பதால் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் அதிகாரிகளுடன் சேர்ந்து செட்டிங் போட்டு சொத்துவரியில் பெரிதாக அடித்துவிட்டதாக நம்புகிறார். அதனால்தான் நிதி கேட்ட மாநகராட்சியிடம் சொத்து வரி மறுமதிப்பீட்டு ஐடியாவை கொடுத்திருக்கிறார். இதன்மூலம் வரி வருவாயும் கணிசமாக கூடும், திமுக மீதும் புகார்களை அடுக்கலாம் அதன் மூலம் முதல்வரின் கவனத்தை ஈர்க்கலாம், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என யோசித்திருக்கிறார். ஆனால், அதிகாரிகளாய் கூடி பேசி முடிவெடுத்த இந்த விவகாரத்தை திமுக உடனடியாக கையிலெடுத்து அடித்து ஆட ஆரம்பித்துவிட்டது.

CM Vijay
CM Vijay

எங்களிடம் ஆலோசிக்காமல் அதிகாரிகளே முடிவெடுத்துவிட்டார்கள் என மேயர் பிரியா தொடங்கி வைக்க, சொத்துவரி 300% உயர்த்தப்பட்டு மக்கள் அவதிப்படுகிறார்கள் என முன்னாள் அமைச்சர் மா.சு அடித்து ஆடினார். சென்னையில் பெரும்பாலான தொகுதிகளை தவெக வென்றிருக்கிறது. சொத்து வரி கன்னாபின்னாவென தீட்டப்பட்டவுடன் தவெக எம்.எல்.ஏக்கள் நிர்வாகிகளின் வீட்டுக்கதவை மக்கள் தட்ட தொடங்கிவிட்டனர். தவெகவினர் தலைமையை மொய்க்க ஆரம்பித்திருக்கின்றனர். சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களும் எழ தொடங்கிவிட்டது. முதல்வரிடம் நல்லப் பெயர் வாங்கலாம் என அதிகாரிகள் துடுக்குத்தனமாக செய்த செயல் ஆளுங்கட்சிக்கே ஆப்பாகிறது என்பதை உணர்ந்தவுடன் தான் முதல்வர் அலுவலகம் அவசர அவசரமாக பேக் அடித்திருக்கிறது. சொத்துவரி மறுமதிப்பீடும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது" என அத்தனை பின்னணி தகவல்களையும் புட்டு புட்டு வைத்தனர்.

மாநகராட்சி மற்றும் அரசின் ஈகோ மோதலுக்கும் அதிகாரிகளின் துடுக்குத்தனத்துக்கும் மக்கள் தலைவலியை எதிர்கொள்ள வேண்டுமா? என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கேள்வியாக இருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.