எஸ்.பி.வேலுமணி ஆப்சென்ட்; ``சீப்பை ஒளிச்சு வச்சா திருமணம் தடைபட்டு போயிருமா? - எடப்பாடி கமென்ட்!
தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி விவசாயிகள் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், மேகதாது விவகாரத்தில் மெத்தனம் காட்டி வருவதாக தவெக அரசைக் கண்டித்தும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ``அணை கட்டும் முயற்சியை முழுமையாகத் தடுத்து நிறுத்த ஆக்கப்பூர்வமான பணியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் பிரதமராக வரவேண்டும் என்கிறார் ஆதவ் அர்ஜுனா. அவர் கனவு காணலாம்! கனவுதான் காண முடியும். 100 நாள்கள் தவெக ஆட்சியில் மக்களுக்காக எந்த ஒரு புதிய திட்டமும் இல்லை. எல்லாம் ரீல்ஸ், ரீல் விட்டுக்கொண்டிருக்கிற ஆட்சியைத்தான் பார்க்கிறோம்.
ஒரு ஆட்சி பொறுப்பேற்று, முதல் 100 நாள்களில்தான் இந்த ஆட்சி எப்படி இருக்கு, திட்டங்கள் எப்படி போடுறாங்க, அதனால் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் அப்படின்னு மக்கள் பார்ப்பார்கள். ஆனால் இவர்கள் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து விவசாயிகள் போராட்டம், அரசு ஊழியர்கள் போராட்டம், செவிலியர்கள் போராட்டம், மருத்துவர்கள் போராட்டம் என போராட்டங்களைத்தான் பார்க்கிறோம். ஆட்சியில மக்களுக்கான திட்டங்கள் எதுவுமே பார்க்க முடியல, இதுதான் இந்த ஆட்சியின் நிலை.

அதுமட்டுமல்ல, இன்னைக்கு பட்ஜெட்டிலும் சரி, வேளாண் பட்ஜெட்டிலும் சரி, ஏற்கெனவே இருக்கின்ற திட்டங்களுக்கு பெயரை மாற்றி, வெற்றி வெற்றி என்று பெயர் சூட்டியுள்ளார்கள். இதுதான் ஆட்சியினுடைய சாதனையாக இந்த 100 நாள்ல பார்க்க முடிகிறத" என்றவர், `எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் போன்றோர் இந்த ஆர்ப்பாட்டத்தை புறக்கணித்திருக்கிறார்களே? என்ற கேள்விக்கு, ``திருமணத்தில் சீப்பை ஒளிச்சு வச்சா திருமணம் தடைபட்டு போயிருமா. இவை குறித்து பொதுவுல பேச முடியாது.
சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது, இதுதான் ஆரம்பம். இந்த அரசாங்கம் அமைந்த பிறகு சொத்து வரியை உயர்த்திட்டாங்க, இனி எந்தெந்த வரியெல்லாம் உயர்த்துவாங்கன்னு பொறுத்திருந்து பாருங்கள். ஏன்னா கடன் அதிகமாகிவிட்டது. இந்த பட்ஜெட்ல இதற்கு முழுமையான விளக்கம் இந்த அரசாங்கத்தால் அளிக்க முடியல.

ஏற்கெனவே இருந்த திமுக அரசாங்கம் இடைக்கால பட்ஜெட் போடும்போது, அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்ட நிதி ஒதுக்கீடு செய்தனர். இந்தப் புதிய அரசாங்கத்துல, திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய நிதி ஒதுக்கப்படவில்லை இதுமாதிரி பல பிரச்னைகள். இந்த அரசு ஆட்சி பொறுப்பேற்று 3 மாசத்துல ரூ.20,000 கோடி கடன் வாங்கியுள்ளனர். 17,000 கோடி வருவாய் செலவு அப்படின்னா இந்த அரசாங்கம் எப்படி செயல்படுது என்பதை நீங்களே கணித்துக் கொள்ளுங்கள்" என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

