கார்கே மீது சாதியத் தீண்டாமை; பாஜக-வின் உண்மை முகம்- தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்பாட்டம் அறிவிப்பு

உத்தரகாண்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசிய இடம் தீட்டு பட்டுவிட்டதாக கங்கை நீர் தெளித்து சுத்திகரிப்பு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்த, பலராலும் கண்டிக்கப்பட்டு வரும் நிலையில் சி.பி.எம்-மின் சார்பு அமைப்பான தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்பாட்டம் அறிவித்துள்ளது.

தீண்டாமை கொடூரம்

இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் காங்கிரஸ் தலைவர், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது.

பிறப்பால் பட்டியல் சமூகத்தவரான கார்க்கே பேசிய இடம் தீட்டு பட்டுவிட்டதாகக் கருதி கங்கை நீர் தெளித்து சுத்திகரிப்பு செய்து அப்பட்டமான தீண்டாமைக் கொடுமை அரங்கேறியுள்ளது.

இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்ட அமைப்பு ஸ்ரீ ராம் சேனா தர்மார்த்த சேவா நியாஸ் ஆகும். இதன் தலைவர் கிரிஷ் சந்திர பாண்டே என்பவர் விஷ்வ இந்து பரிசத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதிய பாகுபாடுகளைக் கடைப்பிடிக்கிற வர்ணாசிரம தர்மத்தை கோட்பாடாகக் கொண்டிருக்கிற பாஜக-வின் உண்மை முகம் மீண்டும் மீண்டும் அம்பலப்பட்டு வருகிறது. அதுவும் ஒரு நாடறிந்த தலைவருக்கே இக்கொடுமை நிகழ்த்த துணிந்துள்ளனர் என்பது சாதிய வன்மத்தின் தன்மையைக் காட்டுகிறது.

இது குறித்து மாநிலங்களவையில் பேசிய திரு கார்கே, “தீண்டாமையின் கொடுமையை உணரச் செய்துவிட்டீர்கள்” என்ற பொருளில் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், சம்பந்தப்பட்டவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

எனவே சுத்திகரிப்பு என்ற பெயரில் தீண்டாமைக் கொடுமைகளை அரங்கேற்றியவர்கள் மீது எஸ்.சி- எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உடனடியாகக் கைது செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது.

இதனை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில சிறப்புத் தலைவர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் தலைமையில் 18.08.26 அன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது" என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.