என்னிடம் ஆலோசிக்காமல் அதிகாரிகளே சொத்து வரியை மாற்றிவிட்டார்கள் - மேயர் பிரியா கடும் தாக்கு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்துவரி உயர்த்தப்பட்டிருப்பதாக மக்கள் கொந்தளிக்கின்றனர். இது சம்பந்தமாக விளக்கம் அளித்திருக்கும் சென்னை மாநகராட்சி, சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது என்கிற தகவலில் உண்மை இல்லை. சொத்து வரி மறுமதிப்பீடு மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது எனக் கூறியிருக்கிறது.

Corporation of Chennai

இது சம்பந்தமாக சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியாவிடம் பேசினோம், மக்கள் பிரதிநிதிகளிடம் கலந்தாலோசிக்காமல் அதிகாரிகளாகவே இந்த முடிவை எடுத்துவிட்டனர் எனக் குற்றஞ்சாட்டுகிறார்.

மேயர் பிரியா கூறியதாவது, இது மக்களை அவதிக்குள்ளாக்கும் செயல். சொத்து வரியை மறுமதிப்பீடு செய்கிறோம் என்ற பெயரில் அதிகமான தொகையை மக்கள் தலையில் கட்டியிருக்கின்றனர். மாநகராட்சிக்கு சொத்து வரி என்பது மிக முக்கியமான வருவாய் ஆதாரம். அது சம்பந்தமாக முக்கிய முடிவை எடுக்க வேண்டுமெனில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.

மேயர் பிரியா
மேயர் பிரியா

மாமன்றத்தில் சொத்து வரி குறித்து கவுன்சிலர்கள் மத்தியில் விவாதித்து ஒரு முடிவை எடுத்திருக்க வேண்டும். ஆனால், இங்கே அதிகாரிகள் தன்னிட்சையாக முடிவெடுத்திருக்கிறார்கள். அதிகாரிகள் முடிவை எடுத்து அறிவித்துவிட்டுதான் மேயரான என்னிடமே தகவல் சொல்கின்றனர்.

இது மக்களை இன்னலுக்குள்ளாக்கும் செயலே. இதைக் கவனமாகக் கையாண்டிருக்க வேண்டும். இந்த மாத மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் இதைக் பெரிய பிரச்னையாக எழுப்புவார்கள் என்கிறார்.

சொத்துவரியில் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அதில் புகார் இருப்பின் மண்டல அலுவலகங்களில் அடுத்த 15 நாட்களுக்குப் புகாரளிக்கலாம் என்று மாநகராட்சி சார்பில் கூறப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.