DC: லோகேஷ் கனகராஜ் அண்ணனை ஏன் அப்படி ட்ரோல் செய்தார்கள் என்றே தெரியவில்லை! - நடிகர் அவினாஷ் பேட்டி
லோகேஷ் கனகராஜ் நடித்திருக்கும் டி.சி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தில் தேவதாஸ் டீமில் ஒருவராக நடித்திருக்கும் நடிகர் அவினாஷை சந்தித்துப் பேட்டி கண்டோம். தொடர்ந்து அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர், டிசி படத்திலும் நல்லதொரு நடிப்பை வழங்கியிருந்தார்.
நம்மிடையே பேசுகையில், "டி.சி படத்திற்கு நல்ல பாராட்டுகள் கிடைத்திருக்கின்றன. படம் ரிலீஸுக்குப் பிறகு நான் இயக்குநர் அருண் மாதேஷ்வரன் அண்ணனை காபி ஷாப்பில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவரிடம், நான் சின்ன வயதிலிருந்தே குட்டி குட்டி மேடைகளில் பெர்ஃபார்ம் பண்ணியிருக்கிறேன். நிறைய கைத்தட்டல்களை வாங்கியிருக்கிறேன். ஆனால், இந்த படத்திற்கு நான் கேட்ட கைத்தட்டு சத்தம் முற்றிலும் வேறு மாதிரியாக இருந்தது. அதே கைகள், அதே சத்தம்தான். ஆனால் இந்த பாராட்டுக்குக் கொஞ்சம் கனம் அதிகம் என்று சொன்னேன்.
முதலில் அருண் அண்ணன் கேப்டன் மில்லர் படத்திற்குத்தான் என்னை ஆடிஷன் செய்தார். ஆனால் அதில் என்னால் நடிக்க முடியாமல் போனது.
பிறகு, லோகேஷ் அண்ணனை வைத்து அருண் படம் பண்ணுகிறார் என்று அழைப்பு வந்தது. ஆரம்பத்தில் போலீஸ் டீமில் அஷ்ரப் என்ற கேரக்டரில்தான் நடிக்கக் கேட்டார். பிறகுதான் இந்த கிட்டி கதாபாத்திரத்தைக் கொடுத்தார்.
இவ்வளவு ஆக்ஷன் படம் எடுப்பதால் செட் பரபரப்பாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் அருண் அண்ணன் பயங்கர சில்லாக இருப்பார். உதவி இயக்குநர், ஒளிப்பதிவாளர், இயக்குநர் என அனைவரும் ஒரே மாதிரியாகவே பழகுவோம்.
முழுமையான கிரியேட்டிவ் சுதந்திரம் இருக்கும் செட் அது" என்றவர், காட்சிகள் குறித்து விவரிக்கையில், ""ஜீப் மேல் இருந்து குண்டை தூக்கி அடிக்கும் காட்சியில் மூன்று கேமராக்கள் இருந்தன. சரியாகக் கேமரா போகஸில் குண்டு போய் விழும்போதுதான் ஸ்டன்ட் டீம் அதை வெடிக்க வைப்பார்கள்.

ஐயயோ! எத்தனை டேக் போகப் போகிறதோ, நாளை காலை வரை ஆகிவிடுமோ என்று பயந்தேன். இதுவரை கிரிக்கெட் விளையாடும்போது கூட பந்தை தூக்கி ஸ்டம்பில் அடித்ததே இல்லை. ஆனால் என்ன நடந்ததென்று தெரியவில்லை, ஐந்து முறையும் டேக்கில் சரியாக ஜீப்பிலேயே அடித்தேன். சவாலாக இருக்கும் என்று நினைத்த விஷயம், சிறப்பாக அமைந்துவிட்டது" என உற்சாகமாகப் பகிர்ந்தார்.
தொடர்ந்து படம் தொடர்பாக பேசியவர், "நான் அருண் அண்ணனிடம், நீங்கள் விநியோகம் செய்த படம், தயாரித்த படம், நீங்கள் நடிக்கும் படம் என மூன்றிலும் நடித்துவிட்டேன். உங்கள் இயக்கத்திலும் நடித்துவிட்டால், இந்த நான்கையும் செய்த முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன் என்று ஜாலியாகச் சொன்னேன்.
ஜில் ஜங் ஜக் பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜ் அண்ணன் நல்லா பண்ணிருக்கடா என்று பாராட்டினார். அதன்பிறகு 29 தயாரித்தபோதும், டிசி படத்தில் நடித்தபோதும் எனக்கு வாய்ப்பளித்தார். இனி அவர் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பும் விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.

மேலும், லோகேஷ் கனகராஜ் கடந்த ஓராண்டாக சமூக வலைதளங்களில் எதிர்கொண்ட விமர்சனங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டவர், "நடுவில் லோகேஷ் அண்ணனை ட்ரோல் செய்தபோது ஏன் என்று எனக்குப் புரியவே இல்லை. ஆனால் அதை மக்கள் உரிமையோடும் பாசத்தோடும்தான் செய்தார்கள் என்று நினைக்கிறேன்.
டி.சி படத்தின் வெற்றிக்கு அவர் முற்றிலும் தகுதியானவர். மேலும் நடிக்கும்போது, நான் நடிக்கப் போகிறேன், நீங்கள் எல்லாம் அனுபவமிக்க நடிகர்கள். நான் நடிக்கும்போது ஏதாவது இன்னும் சிறப்பா பண்ணலாம் என்று தோன்றினால் தயங்காமல் சொல்லுங்கள் என்பார். உடனே விஷயத்தைப் பிடித்துக்கொள்ளும் ஒரு குவிக் லேர்னர் அவர்" எனப் பகிர்ந்துகொண்டார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


