Wamiqa Gabbi: எனக்கு ஒரு காலத்தில் தைரியம் கொடுத்த அந்த தேவதை! - பகிரும் நடிகை ஜீவா சுப்ரமணியம்

லோகேஷ் கனகராஜ், வாமிகா கேபி நடித்திருக்கும் டிசி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் பலரும் வாமிகா கேபி குறித்தும், அவருடைய உதவும் பண்பு பற்றியும் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகை ஜீவா சுப்ரமணியம் அவருடைய சமூக வலைதளப்பக்கத்தில் வாமிகா கேபி குறித்து ஒரு பதிவிட்டிருக்கிறார்.

DC Movie

அந்தப் பதிவில் அவர், "இன்று D.C. திரைப்படத்தில் சந்திராவாக நடித்திருக்கும் வாமிகா கபி அவர்களைப் பார்க்கும்போது, என் மனதில் முதலில் வருவது எங்கள் ஆரம்ப காலப் பயணம்தான். அவருடைய ஆரம்ப காலத்தில், அவருடன் நான் உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறேன். அவருடன் நான் பயணித்த அந்த நாட்கள் அனைத்தும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத, மிகவும் இனிமையான நினைவுகள்.

அவர் தனக்குப் பிடிக்காத எதையும் செய்ய மாட்டார். தனது உழைப்பிலும், தனது முடிவுகளிலும் மிகவும் உறுதியாக இருப்பவர். அந்தத் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் நான் அவரிடமிருந்துதான் நிறைய கற்றுக்கொண்டேன். நான் பல நேர்காணல்களிலும் சொல்லியிருக்கிறேன்.

எனக்குள் தைரியத்தை விதைத்தவர் வாமிகா மேடம்தான். நான் எப்போதும் அவரை “மேடம்” என்றுதான் அழைப்பேன். ஆனால் அவர், “மேடம் என்று அழைக்காதே… வாமிகா என்று அழை” என்று சொல்வார். அந்த அளவுக்கு எங்களுடைய உறவு ஒரு முதலாளி–உதவியாளர் உறவாக இல்லாமல், இரண்டு சகோதரிகள் போலவே இருந்தது. அவர் ஆரம்ப காலத்தில் பணியாற்றிய பல திரைப்படங்களிலும் அவருடன் நான் உதவியாளராகப் பயணித்திருக்கிறேன்.

ஒரு கட்டத்தில் நான் வாழ்க்கையில் மிகவும் உடைந்து போய், மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்தபோது, “நானும் ஒரு நடிகையாக வேண்டும்” என்ற ஆசையை என்னுள் இன்னும் ஆழமாக விதைத்தவர் இவர்தான்.

ஆசை எனக்குள் ஏற்கனவே இருந்தது. ஆனால் அந்த ஆசைக்கு ஒரு வடிவம் கொடுத்து, அதை நோக்கி என்னைத் தள்ளிச் சென்றவர் வாமிகா. அப்போது அவர் எப்போதும் ஒரு லேப்டாப்பை உடன் வைத்திருப்பார். அதில் சில விஷயங்களை எனக்குக் காட்டி, “உன்னைப் போன்றவர்களெல்லாம் இப்படித்தான் முன்னேறுகிறார்கள்… உன்னாலும் முடியும்” என்று எனக்கு நம்பிக்கையும் ஊக்கமும் கொடுத்திருக்கிறார்.

Wamiqqa Gabbi - Jeeva Subramaniam
Wamiqa Gabbi - Jeeva Subramaniam

அந்த வார்த்தைகள் என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. “நானும் தமிழில் நன்றாக வர வேண்டும்… நானும் ஒரு நாள் நடிகையாக வேண்டும்…” என்று பல முறை கடவுளிடம் பிரார்த்தனை செய்திருக்கிறேன். இன்று, D.C. திரைப்படத்தின் மூலம் சந்திராவாக மக்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் வாமிகாவைப் பார்க்கும்போது, என் மனம் நிறைய மகிழ்ச்சியடைகிறது.

எனக்கு ஒரு காலத்தில் தைரியம் கொடுத்த அந்த தேவதை, இன்று ஒரு அழகான வெற்றியைப் பெற்றிருப்பதைப் பார்ப்பது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் மகிழ்ச்சியான தருணம். இந்த வெற்றி இன்னும் பல வெற்றிகளுக்கான தொடக்கமாக இருக்க வேண்டும் என்று மனதார கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.

உன்னுடைய பயணத்தை அருகில் இருந்து பார்த்தவள் என்ற முறையில், இன்று உன்னைப் பார்த்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இன்னும் உயரங்கள் பல உன்னைத் தேடி வரட்டும்" எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.