கரூர்: `ஏசி பேருந்துலாம் இருக்கட்டும்; எங்க ஊருக்கு எப்போ விடிவுகாலம்?- பேருந்துக்கு ஏங்கும் மக்கள்
நம் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டோம். இந்த தருணத்தில் போக்குவரத்துத் துறையில் பல்வேறு உச்சம் தொட்டு சாதனை படைத்து வருகிறோம்.
ஒருபுறம் புல்லட் ரயிலை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். மற்றொருபுறம் பல கிராம மக்கள் பேருந்துக்காக இன்னமும் வழிமேல் விழி வைத்துக் காத்துக் கிடக்கும் சோகக் கதையும் இருந்து கொண்டிருக்கிறது.
கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாழ்வார்மங்கலம், தென்நகர், சின்னமநாயக்கன்பட்டி, வீரசிங்கம்பட்டி, குமரக்கவுண்டனூர் ஆகிய கிராம மக்கள் பேருந்து வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் சுமார் 100 லிருந்து 150 குடும்பங்கள் வரை வசித்து வருகின்றன.
பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்களும், வேலைக்குச் செல்லும் பொது மக்களும் தினமும் ஊரை விட்டு வெளியே வந்து செல்லும் நிலையில் உள்ளனர். பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் வரும்... வரும் என்று மட்டுமே சொல்கின்றனர். ஒரே ஒரு தனியார் மினி பஸ் மட்டும்தான் இந்த கிராமத்திற்கு வந்து செல்கிறது. அரசுப் பேருந்துக்காக தினமும் சுமார் 3 கிலோ மீட்டர் நடந்து ஒத்தக்கடை எனும் இடத்திற்குச் செல்ல வேண்டும்.
இதனால் பள்ளிக் கல்லூரிக்கு மாணவர்கள் தாமதமாகச் செல்லும் சூழலும், வீட்டிற்கு வரும்போது புத்தகப் பையுடன் சோர்வாக நடந்தும் வரும் நிலையும் உள்ளது. இந்த மக்களின் எதிர்பார்ப்பு வீரப்பூரில் இருந்து வரும் பேருந்துகளும், தோகைமலையில் இருந்து வரும் பேருந்துகளும் தங்கள் கிராமங்களுக்குள் வந்து செல்ல வேண்டும் என்பதே. தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை அனைத்துப் பேருந்துகளும் AC BUS எனும் திட்டத்தை நோக்கிச் செல்வதற்கு முன்னால், அனைத்து கிராமங்களுக்கும் டவுன் பஸ் எனும் நிலையை உறுதி செய்ய வேண்டும். கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு, இந்தியாவின் வாழ்வும் வளமும் கிராமங்களில்தான் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இது குறித்து தரகம்பட்டி அரசு கலைக் கல்லூரி மாணவர் மோகன் குமார் கூறும்போது,
"நாங்க தினமும் 3 கிலோமீட்டர் நடந்து போய்தான் பஸ் ஏறுறோம். இதனால பள்ளிக் கல்லூரிக்கு தாமதமாகப் போறதும், திரும்பி வரும்போது புத்தகப்பையோட சோர்வாக வரும் சூழலும் உள்ளது. போட்டிகளுக்காக மற்ற கல்லூரிகளுக்குப் போயிட்டு திரும்பி வரும்போது வீட்டில் இருந்து யாராவது வண்டி எடுத்துட்டு வந்துதான் கூட்டிட்டு போறாங்க.

நிறைய முறை மனு கொடுத்தும் ஒன்னும் நடக்கலை. கடந்த முறை அ.தி.மு.க. சார்பா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட மருத்துவர். திவ்யா அவர்களோட ஏற்பாட்டுலதான் ஒரு தனியார் மினி பஸ் வந்துட்டு இருக்கு. இந்த பஸ்ஸ காலையில விட்டுட்டா ஒத்தக்கடைக்கு போய்தான் டவுன் பஸ் ஏறணும். வீரப்பூரில் இருந்து வரும் பேருந்துகள் எங்க கிராமத்து வழியா வந்தா படிக்கிற பசங்களுக்கு, கூலி வேலைக்குப் போறவங்களுக்கு பயனுள்ளதா இருக்கும். சாலைவசதி நல்லா இருந்தும், பேருந்து வசதி இல்லாம இருக்கு. சமீபமா போக்குவரத்துத்துறை அமைச்சர் தமிழகம் முழுவதும் ஏ.சி பேருந்துகள் விடப்படும்னு சொல்லியிருக்காரு... முதல்ல எங்க ஊருக்கு சாதாரண அரசு பேருந்து வந்து போக அதிகாரிகள் வழி செய்யணும். போர்க்கால அடிப்படையில அரசாங்கம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்" என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


