`கையில் ரூ.1.87 லட்சம்; 6 நண்பர்கள்; ஒரு மாடி அறை- HCL நிறுவனம் உருவான கதையை பகிர்ந்த அஜய் சௌத்ரி!
ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் (HCL) நிறுவனம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அதன் இணை நிறுவனர் அஜய் சௌத்ரி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் நிறுவனத்தின் ஆரம்பக்கால நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "நாங்கள் எங்கள் வேலையைத் துறந்தோம். சிவ் நாடார், அர்ஜுன் மல்ஹோத்ரா, யோகேஷ் வைத்யா, சுபாஷ் அரோரா, டி.எஸ்.பூரி மற்றும் நான் (அஜய் சௌத்ரி) என மொத்தம் ஆறு பேர் இருந்தோம்.
அது 1976-ஆம் ஆண்டு. இந்தியாவில் ஸ்டார்ட்அப் என்ற கலாசாரம் அப்போது பரவலாக இல்லை. வென்ச்சர் கேபிட்டல் நிதியுதவி என்ற ஒன்று அப்போது இருக்கவே இல்லை. வெறும் யோசனையை மட்டும் வைத்துக்கொண்டு நின்ற ஆறு இளைஞர்களுக்குக் கடன் கொடுக்க வங்கிகளும் தயாராக இல்லை. கணினிகளைப் பற்றிச் சொல்வதானால்... பெரும்பாலான மக்கள் அதைக் கேள்விப்பட்டுக்கூட இருக்கவில்லை.
ஆனால், மைக்ரோப்ராசஸர் தொழில்நுட்பம் உலகையே மாற்றப்போகிறது என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். அதனால், அந்தத் துணிச்சலான முடிவை எடுத்தோம். எங்கள் ஆறு பேரிடமிருந்த சேமிப்பை ஒன்றுதிரட்டி, கடன் வாங்கி, ஒருவரது காரையும் விற்று, எப்படியோ ₹1.87 லட்சத்தைச் சேர்த்தோம். டெல்லியின் கோல்ஃப் லிங்க்ஸ் பகுதியில் இருந்த ஒரு சிறிய மாடி அறையே எங்கள் முதல் அலுவலகமானது. எங்களுக்கு மைக்ரோகாம்ப் என்று பெயரிட்டுக் கொண்டோம். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு கணினியை உருவாக்க நாங்கள் விரும்பினோம். ஆனால், ஒரே ஒரு பெரிய பிரச்னை இருந்தது.
எங்களிடம் கணினி தயாரிப்பதற்கான உரிமம் இல்லை. அதுவே எங்களை யுபி எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தை நோக்கி அழைத்துச் சென்றது. அவர்களிடம் உரிமம் இருந்தது; எங்களிடம் தொழில்நுட்பம் இருந்தது. அந்தத் தொழில் கூட்டாண்மைதான் ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் (HCL) பிறக்கக் காரணமானது. ஆனால், இதன் பிறகு நடந்ததுதான் அனைத்தையும் விட மிகத் துணிச்சலான விஷயம். வடிவமைப்பு நிலையிலேயே இருந்த, இன்னும் முழுமையாக உருவாகாத ஒரு கணினியை நாங்கள் விற்கத் தொடங்கினோம். எங்களிடம் ஒரு தகவலேடு மற்றும் கணினியின் மாதிரி வடிவம் மட்டுமே இருந்தன. அவ்வளவுதான்!
எங்கள் விற்பனைக் குழுக்கள் இந்தியா முழுவதும் சென்று, கதவுகளைத் தட்டி, அதுவரை அவர்கள் பயன்படுத்தியிராத ஒரு தொழில்நுட்பத்தை வாங்குமாறு நிறுவனங்களை ஒப்புக்கொள்ள வைத்தன. எங்களின் முதல் ஆர்டர்கள் ஐஐடி கரக்பூர் மற்றும் ஐஐடி மெட்ராஸிலிருந்து வந்தன. அதன் பிறகுதான் மிகவும் கடினமான பகுதி தொடங்கியது. வணிக நிறுவனங்களை ஒப்புக்கொள்ள வைப்பது.
கோயம்புத்தூரில், எங்களை விட மிகப்பெரிய மற்றும் புகழ்பெற்ற நிறுவனமான டிசிஎம் டிபி நிறுவனத்துடன் நாங்கள் போட்டியிட வேண்டியிருந்தது. பிரிமியர் மில்ஸ் நிறுவனத்தின் வரவேற்பறையில் அமர்ந்து, டிசிஎம் குழுவினர் தங்கள் தயாரிப்பை விவரிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது.

அவர்களுக்கு அடுத்து நாங்கள் உள்ளே சென்றோம். நாங்கள் வெற்றி பெற்றோம்! அந்த ஒரு ஆர்டர் எங்களுக்கு மேலும் ஐந்து ஆர்டர்களைப் பெற்றுத் தந்தது. பிறகு பத்து ஆர்டர்கள் வந்தன. அந்த ஆரம்பக் காலத்தில் HCL அப்படித்தான் இருந்தது. பெரிய வங்கிச் சேமிப்போ, பெரிய பிராண்ட் பெயரோ எங்களிடம் இல்லை. ஆனால், சாதிப்பதற்கான வழியை நாங்கள் கண்டறிந்தோம்.
நாங்கள் சலிப்பின்றி இயங்கிக் கொண்டே இருந்தோம். வாய்ப்புகளைத் தேடினோம். எதையும் எதிர்கொள்ளும் மனப்பான்மை கொண்ட மனிதர்களைப் பணியில் அமர்த்தினோம். தொழில்நுட்பம் பயமுறுத்துவதாக இருக்கக் கூடாது. அது பயனுள்ளதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். நாங்கள் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருந்தோம்.
இந்தியாவின் ஆரம்பகால உள்நாட்டு கணினிகளை உருவாக்கியதிலிருந்து, HCL தொடங்கி நான்கே ஆண்டுகளில் எங்கள் தொழிலை சிங்கப்பூருக்குக் கொண்டு சென்றது வரை... டெல்லியின் ஒரு சிறிய அறையிலிருந்து ஒரு சர்வதேசத் தொழில்நுட்ப நிறுவனமாக வளர்ந்தது வரை...
இந்த 50 ஆண்டுகளை நான் திரும்பிப் பார்க்கும்போது, 1976-இல் ஒன்றாக அமர்ந்து "இந்த பைத்தியக்காரத்தனமான யோசனை உண்மையில் வேலை செய்யுமா?" என்று யோசித்த அந்த ஆறு பேரைப் பற்றி நினைக்கிறேன். அந்த மாடி அறையைப் பற்றி நினைக்கிறேன். அடுத்த கதவைத் தட்டுவதற்குத் தேவையான அந்தத் துணிச்சலைப் பற்றி நினைக்கிறேன்.

எங்களைப் பொறுத்தவரை, அதுவே உண்மையான HCL கதை! 50 ஆண்டுகளுக்குப் பிறகு, நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்குத் தொழில்நுட்பம் மாறிவிட்டது. ஆனால், அந்த லட்சியக் கனவும் வேகமும் என்றும் மாறவில்லை:
பெரிதாகக் கனவு காணுங்கள். சவால்களை எதிர்கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, விடாமுயற்சியோடு லட்சியத்தை நோக்கியே இருங்கள். இனிய 50-ஆம் ஆண்டு வாழ்த்துகள், HCL! என்னவொரு அற்பதமான பயணம் இது!"என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


