ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருவிழா; அமாவாசை தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்
பிரசித்திபெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா 10 நாள்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றதுடன் துவங்கியது.
திருவிழாவின் 8-ம் நாளான இன்று ஆடி அமாவாசை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஶ்ரீபர்வதவர்த்தினி அம்மன் தங்கப்பல்லக்கில் வீதி உலா நடந்தது. இதனைத் தொடர்ந்து தங்க கருட வாகனத்தில் ஶ்ரீராமர் அக்னிதீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கினார்.


முன்னதாக அக்னிதீர்த்தம் மற்றும் ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் தீர்த்தமாட மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்திருந்தனர். இவர்கள் அதிகாலை முதலே கடலில் நீராடி, மறைந்த தங்கள் முன்னோர்கள் பெயரில் திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.
இதனை தொடர்ந்து கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடியதுடன் சாமி தரிசனமும் செய்தனர். சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் பெருமளவில் குவிந்ததால் இன்று கட்டணம் ஏதும் இன்றி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கோயில் மற்றும் அக்னிதீர்த்தம, தனுஷ்கோடி ஆகியவற்றில் குவிந்த பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையில் போலீஸார் மேற்கொண்டனர்.

பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை கோயில் இணை ஆணையர் சுரேஷ் தலைமையில் கோயில் ஊழியர்களும், நகராட்சி தலைவர் நாசர்கான், நகராட்சி ஆணையர் ஆண்டவன் ஆகியோர் தலைமையில் ஊழியர்களும் மேற்கொண்டிருந்தனர்.
போக்குவரத்து நெரிசலை தடுக்க அரசு பேருந்துகள் மட்டும் கோயிலுக்கு ஒரு கிலோ மீட்டர் வரை அனுமதிக்கப்பட்டது. ஆட்டோ உள்ளிட்ட தனியார் வாகனங்கள் கோயில் பகுதியில் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பேருந்து நிலையம் உள்ளிட்ட மற்ற இடங்களுக்கு நடந்தே சென்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


