`கருத்து வேறுபாடு, பட்ஜெட் பிரச்னைகளால் அருண்ராஜா காமராஜுடன் படம் இல்லை - விஷ்ணு விஷால் அறிவிப்பு

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உடன் நடித்துத் தயாரிக்க இருந்த திரைப்படம் கைவிடப்படுகிறது என்று நடிகர் மற்றும் இயக்குநர் விஷ்ணு விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"அருண்ராஜா காமராஜுடன் நான் இணையவிருக்கும் அடுத்த படம் குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு ஊகங்கள் வெளியாகி வருகின்றன.

இதைப் பற்றிப் தெளிவுபடுத்தி, தற்போதைய நிலவரத்தை ரசிகர்களுக்குத் தெரிவிப்பதுதான் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன் - ஏனெனில் அதைத் தெரிந்துகொள்ளும் உரிமை உங்களுக்கு உண்டு.

அருண்ராஜா காமராஜ்

கடந்த ஓராண்டாக நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த திட்டங்களில் இதுவும் ஒன்று. இதற்காகக் கடந்த பத்து மாதங்களாக தீவிரமாகத் தயாராகி வந்தேன்.

கட்டா குஸ்தி 2 படப்பிடிப்புக்குப் பிறகு இந்தப் படத்தை தொடங்கலாம் என்று நம்பியிருந்தேன். இதைத் திரைக்குக் கொண்டுவர மிகவும் ஆர்வமாக இருந்தேன்.

ஆனால் துரதிஷ்டவசமாக, சமீபகாலமாக இயக்குநருடன் ஏற்பட்ட படைப்பு ரீதியான கருத்து வேறுபாடுகள் மற்றும் பட்ஜெட் பிரச்னைகள் காரணமாக இந்தத் திட்டம் முடங்கியுள்ளது.

உண்மையைக் சொல்லப்போனால், பட்ஜெட் கட்டுப்பாடு என்பது தற்போது திரைத்துறை சந்தித்து வரும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக மாறியிருக்கிறது.

இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்ய என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். ஆனால் எங்களது அனைத்து முயற்சிகளுக்குப் பிறகும், இந்த திட்டத்தை மேற்கொண்டு கொண்டு செல்ல வேண்டாம் என்று நாங்கள் முடிவெடுத்துள்ளோம்.

அருண்ராஜா காமராஜுக்கும் எனக்கும் இது ஒரு கடினமான முடிவுதான் என்பதை நான் புரிகிறேன். இருப்பினும், இத்திட்டத்திலிருந்து நாங்கள் இருவரும் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தொடர்பான சட்டப்பூர்வ நடைமுறைகள் முடிவடைவதற்குச் சற்று கால அவகாசம் ஆகும்.

View this post on Instagram

A post shared by Vishnu Vishal (@thevishnuvishal)

எப்போதும் போல, எதிர்காலத்தில் வரவிருக்கும் எனது அடுத்தடுத்தப் பணிகளைக் குறித்து நான் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன். ஆனால் சில நேரங்களில், ஒரு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கும்போது இதுபோன்ற கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கிறது. அதில் ஒன்றுதான் இதுவும்.

தற்போது, எனது நடிப்பில் வெளிவரவிருக்கும் இரண்டு வானம் திரைப்படம் மற்றும் எனது சகோதரனின் யெல்லோ யெல்லோ டர்ட்டி ஃபெல்லோ ஆகிய படங்களின் வெளியீட்டில் மட்டுமே எனது கவனம் உள்ளது.

அதுமட்டுமின்றி, மிகவும் சுவாரசியமான மற்றும் வித்தியாசமான ஒரு படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்; அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்.

உங்கள் தொடர்ந்து வழங்கி வரும் அன்புக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி. வரும் நாட்களிலும் இதே போன்ற ஆதரவை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்."

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.