ஐபிஎல் டெல்லி கேபிடல்ஸ் பிளேயர் கைது.. மருத்துவ மாணவிக்கு பாலியல் வன்கொடுமை?..

 

ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடும் இளம் கிரிக்கெட் வீரர் அபிஷேக் போரெல், மருத்துவ மாணவி அளித்த பாலியல் வன்கொடுமை மற்றும் கிரிமினல் மிரட்டல் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். 

 

ஹூக்ளி ஊரக காவல் கண்காணிப்பாளர் குன்வர் பூஷன் சிங் அளித்த தகவலின்படி, தும்துமா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எமாமி சிட்டி பகுதியில் வைத்து பெங்கால் அணியைச் சேர்ந்த இவரை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த ஜூன் மாதம் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், திருமணம் செய்வதாக ஏமாற்றித் தம்மோடு உறவு வைத்துக் கொண்டு, பின்னர் தன்னை தாக்கி மிரட்டல் விடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் காவல்துறையை கைது செய்ய உத்தரவிட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாகவும், கடந்த ஆண்டு முதல் அவர் தன்னை தவிர்க்க தொடங்கியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 மேலும், தன்னை அடைத்து வைத்துத் துன்புறுத்தியதாகவும், காயங்கள் ஏற்படுத்தியதாகவும் எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது. அனைத்து குற்றச்சாட்டுகளையும் அபிஷேக் போரெல் இதற்கு முன்பு மறுத்துள்ளார். 2023 முதல் ஐபிஎல்லில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் இவர், பெங்கால் அணிக்காக முதல்தர போட்டிகளிலும் பங்கெடுத்துள்ளார். காவல்துறையினர் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.