`நரேந்திர என்ற பெயர் பிடிக்கலை..! - குத்துச்சண்டை வீரர் பகிர்ந்த சம்பவம்; உரக்கச் சிரித்த மோடி
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர் நரேந்தர் பெர்வால், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது தனக்கு நடந்த ஒரு வேடிக்கையான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
அதைக் கேட்டு பிரதமர் மோடி உரக்கச் சிரித்திருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
2015-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ராணுவ விளையாட்டுப் போட்டியில் நரேந்தர் பெர்வால் பங்கேற்றார். அதில் அவருடைய முதல் போட்டியே பாகிஸ்தான் குத்துச்சண்டை வீரருக்கு எதிரானது.
ராணுவ விளையாட்டுப் போட்டி என்பதாலும், இரு நாடுகளுக்கு இடையே எல்லைப் பதற்றம் இருந்ததாலும், எக்காரணத்தைக் கொண்டும் பாகிஸ்தானிடம் தோற்றுவிடக் கூடாது என்று இந்திய ராணுவ அதிகாரிகள் பெர்வாலுக்கு அறிவுறுத்தியிருந்தனர்.
Pakistani Boxer Told Me, ‘I Hate the Name Narendra’: Indian Boxer Narender Berwal Recalls 2015 Encounter with PM Modi pic.twitter.com/oV8mandaH9
— India Brains (@indiabrains) August 10, 2026
கடுமையான அந்தப் போட்டியில் நரேந்தர் பெர்வால் வெற்றி பெற்றார். இருப்பினும், போட்டியில் இருவருக்கும் முகத்தில் காயம் ஏற்பட்டதால், தையல் போடுவதற்காக இருவரும் ஒன்றாக மருத்துவமனைக்குச் சென்றனர். அப்போது பாகிஸ்தான் வீரர் பெர்வாலிடம், தம்பி, நான் ஒன்று சொல்லட்டுமா? என்று கேட்டிருக்கிறார். பெர்வாலும் சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்.

அதற்கு அந்த பாகிஸ்தான் வீரர், உன் பெயர் நரேந்தர், உனக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளரின் பெயர் நரேந்திர ராணா... உங்கள் நாட்டின் பிரதமரின் பெயர் நரேந்திர மோடி... இப்போது எனக்கு நரேந்திர என்ற பெயரைக் கேட்டாலே வெறுப்பாக இருக்கிறது என்று விரக்தியுடன் கூறியிருக்கிறார்.
இந்தச் சம்பவத்தை நரேந்தர் பெர்வால் பிரதமர் மோடியிடம் விவரித்தபோதுதான், பிரதமர் மோடியால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் உரக்கச் சிரித்திருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

