TNPL 2026: 40 பந்துகளில் சதம்... கோவையைச் சிதறடித்த சதுர்வேத்; மதுரையின் மிரட்டல் சேஸ்!

திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற TNPL 2026-ன் 7-வது போட்டியில், கோவை கிங்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. 

முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் 239 ரன்கள் குவிக்க, அதை 19.3 ஓவர்களில் துரத்தி பிடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது மதுரை பாந்தர்ஸ்.

239 ரன்கள்... டி20 போட்டியில் இதைவிட பெரிய இலக்கு வேண்டுமா? கோவை கிங்ஸ் அப்படித்தான் நினைத்திருக்கலாம். ஆனால், மதுரை பேட்டர்கள் களத்தில் இருந்த அடுத்த சில மணி நேரத்தில் அந்த எண்ணமே தலைகீழாக மாறியது.

ஒருபுறம் கோவையின் 239 ரன்கள். மறுபுறம், அதை அசால்ட்டாக சேஸ் செய்த மதுரை. இந்த இரண்டுக்கும் நடுவே, போட்டியின் போக்கையே மாற்றிய ஒரு பெயர் — என்.எஸ். சதுர்வேத்!

239 ரன்கள்... கோவையின் மிரட்டல் தொடக்கம்!

முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸுக்குத் தொடக்கம் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. ஆனால், அடுத்தடுத்து வந்த பேட்டர்கள் ஆட்டத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

லோகேஷ்வர் 38 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்தார். அதன்பிறகு களமிறங்கிய பி. சச்சின், பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக ரன்கள் அடிக்க, மறுமுனையில் ஆண்ட்ரே சித்தார்த் அவருக்குச் சரியான துணையாக நின்றார்.

இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 143 ரன்கள் சேர்த்தனர். சச்சின் 84 ரன்களிலும், ஆண்ட்ரே சித்தார்த் 87 ரன்களிலும் அசத்த, 20 ஓவர்கள் முடிவில் கோவை கிங்ஸ் 239/4 என பிரமாண்ட ஸ்கோரை எட்டியது.

மதுரையின் முன் இருந்த இலக்கு 240...

கோவை பந்துவீச்சாளர்கள் இலக்கின் அழுத்தத்தை மதுரை பேட்டர்கள் மீது ஏற்ற முயன்றனர். ஆனால், சதுர்வேத் வேறு திட்டத்துடன் களத்தில் இருந்தார்.

ஒரு பந்து பவுண்டரி.. அடுத்த பந்து சிக்ஸர்.. மீண்டும் பவுண்டரி!

சதுர்வேத்தின் பேட் பேசத் தொடங்கியதும், 240 என்ற இலக்கு கொஞ்சம் கொஞ்சமாக மதுரையின் கைக்குள் வரத் தொடங்கியது. பந்துவீச்சாளர்கள் மாற்றப்பட்டார்கள். ஃபீல்டிங் மாற்றப்பட்டது. ஆனால், சதுர்வேத்தின் அதிரடி மட்டும் குறையவில்லை. ரன்ரேட் உயர்ந்துகொண்டே போனது. பவுண்டரிகள் பறந்துகொண்டே இருந்தன. 

வெறும் 40 பந்துகளில் சதம் அடித்து TNPL வரலாற்றிலேயே அதிவேக சதம் என்ற சாதனையைப் படைத்த சதுர்வேத், இறுதியில் 121 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். 

கடைசி ஓவர்... 16 ரன்கள்!

சதுர்வேத் ஆட்டமிழந்ததும் போட்டியில் மீண்டும் பரபரப்பு. மதுரைக்கு வெற்றி பெற கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.

“இவ்வளவு தூரம் வந்துவிட்டோம்... இங்கே கோட்டைவிடக் கூடாதே!” என்ற பதற்றம். ஆனால், பால்சந்தர் அனிருத் அதற்கெல்லாம் இடம் கொடுக்கவில்லை. கடைசி ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி, மீதமிருந்த பதற்றத்தையும் துடைத்தெறிந்தார். 

19.3 ஓவர்களில் 240/4 என்று கோவை கிங்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மதுரை பாந்தர்ஸ். இதன்மூலம் TNPL வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றிகரமான ரன் சேஸை நிகழ்த்தி மதுரை பாந்தர்ஸ் புதிய சாதனை படைத்திருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.