சி.விஜயபாஸ்கருக்கு வெறும் மாவட்டப் பதவி மட்டும்தானா? ஆதங்கப்படும் ஆதரவாளர்கள்
அ.தி.மு.க-வில் ஒரு காலத்தில் ‘பவர்’ஃபுல் அமைச்சராக வலம் வந்தவர் சி.விஜயபாஸ்கர். புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் மட்டுமின்றி, தமிழக அளவிலும் தனக்கெனத் தனிச் செல்வாக்கை வைத்திருந்தவர்.
சமீபத்தில் அ.தி.மு.க-விலிருந்து விலகி, விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
கட்சியில் இணைவதற்கு முன்பாகவே தொகுதி முழுவதும் சென்று மக்களிடம் கருத்துக் கேட்பது, மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிப்பது, ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களை அழைத்து பிரமாண்டமாக பிரியாணி விருந்தளிப்பது என புதுக்கோட்டையை அதிரவைத்தார் சி.விஜயபாஸ்கர்.
"பனையூரிலிருந்து அண்ணனுக்கு மண்டலப் பொறுப்பு அல்லது மாநில அளவில் துணைப் பொதுச் செயலாளர் பதவி நிச்சயம் வரும்" என்று அவரது ஆதரவாளர்கள் பெரும் நம்பிக்கையோடு காத்திருந்தனர்.
ஆனால், தவெக தலைமை வெளியிட்ட புதிய நிர்வாகிகள் நியமன அறிவிப்பு, விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத சி.விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள்,
"சி.விஜயபாஸ்கருக்கு புதுக்கோட்டை மேற்கு மாவட்ட ‘அமைப்புச் செயலாளர்’ பதவி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த மற்ற தலைவர்களான கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மதுராந்தகம் மரகதம் குமரவேல், நாங்குநேரி ராஜகோபால் உள்ளிட்டோருக்கு மாவட்டப் பொறுப்போடு சேர்த்து, மாநில அளவிலான ‘துணைப் பொதுச் செயலாளர்’ பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகளில் மாவட்டச் செயலாளர் என்பவரே குறிப்பிட்ட பகுதியின் முழு கட்சி அதிகாரத்தையும் தன் கையில் வைத்திருக்கும் முதன்மை நபர். ஆனால், தவெக-வில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘மாவட்ட அமைப்புச் செயலாளர்’ பதவி, அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு அலங்காரப் பதவிதான். இதில் கட்சி அளவில் எந்தவித தனி அதிகாரமும் கிடையாது.

அதேபோல், பிற தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ‘துணைப் பொதுச் செயலாளர்’ பதவியும்கூட உண்மையில் பெரிய அதிகாரங்கள் எதுவும் இல்லாத ஒரு பொறுப்பே என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
கட்சியில் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் தொடர்ந்து பதவி கேட்டு அழுத்தம் கொடுத்ததாலும், பதவியே கொடுக்காமல் காலம்கடத்துகிறார்கள் எனப் பின்வாங்கத் தொடங்கியதாலும், அவர்களைச் சமாதானப்படுத்தவே தவெக தலைமை இப்படி ஒரு அலங்காரப் பதவியை அவசர அவசரமாக உருவாக்கியுள்ளது . அப்படி ஒரு அலங்காரப் பதவிதான் சி.விஜயபாஸ்கருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அவருடைய அரசியல் அனுபவம், அதிமுகவில் அவர் வகித்த பொறுப்புகள் இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு தவெகவில் முக்கியப் பதவி கொடுத்திருக்க வேண்டுமே ஒழிய அவரை பத்தோடு பதினொன்றாக நினைத்து இந்த டம்மி பதவி வழங்கப்பட்டிருப்பது எங்களை வருத்தத்திற்கு உள்ளாக்கி உள்ளது. ஆனாலும் தனக்கு கொடுத்துள்ள பொறுப்பைச் சிறப்பாகச் செய்து கட்சித் தலைமையின் கவனத்தை விரைவில் பெறுவார்.
கரூரில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில் 1 தொகுதியில் மட்டுமே தவெக வெற்றி பெற்றது. எனவே, அங்கு கரூரில் கட்சியின் வலிமையை அதிகரிக்க எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு மாவட்டப் பொறுப்புடன் சேர்த்து துணைப் பொதுச் செயலாளர் என்ற மாநிலப் பதவியும் தூக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதே அளவு செல்வாக்குமிக்க சி.விஜயபாஸ்கருக்கு புதுக்கோட்டையில் மாவட்ட அமைப்புச் செயலாளர் என்ற வெறும் அலங்காரப் பதவி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதுதான் எங்களை வேதனைப்படுத்துகிறது..." என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
சி.விஜயபாஸ்கருக்கு மாநிலம் அல்லது மண்டலப் பதவி கிடைக்காமல் முடக்கப்பட்டதன் பின்னணியில், அமைச்சர் ஒருவர் நடத்திய அரசியல் காய்நகர்த்தலே முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

சி.விஜயபாஸ்கருக்கு ஆரம்பத்திலேயே மாநில அளவிலான உயர்பதவி வழங்கப்பட்டால், தனது செல்வாக்கிற்கு அது பெரும் சவாலாக மாறிவிடும் எனக் கருதிய அமைச்சர், மேலிடத்திடம் பேசி, "அவருக்கு மாவட்ட அளவிலான பொறுப்பை மட்டும் வழங்குங்கள்" என்று வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனாலேயே பனையூர் தலைமை விஜயபாஸ்கருக்கு புதுக்கோட்டை மேற்கு என்ற தனி மாவட்டத்தை ஏற்படுத்தி இந்தப் பதவியை கொடுத்து அவருக்கு ‘செக்’ வைத்துள்ளது. அமைச்சருக்கு எவ்வித தொந்தரவும் கொடுக்காத வகையில் தலைமை இந்த அதிரடி முடிவை முடிவெடுத்துள்ளதாம் தகவல்கள் வெளிவந்துள்ளன.
"கழக அமைப்புச் செயலாளர்,அமைச்சர் என்ற பெரும் பதவிகள் கொடுத்து அலங்கரித்த அதிமுகவிலிருந்து விலகி, எம்எல்.ஏ.பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு, பல நெருக்கடிக்கு மத்தியிலும் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டு, தொகுதி முழுவதும் உள்ள தவெக நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்து வரை போட்டு காரியத்தைச் சாதிக்கப் பார்த்த சி.வி.பி-க்கு பனையூர் கொடுத்த பரிசு இதுதானா?" என்ற சி.விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் ஆதங்கம் புதுக்கோட்டையில் அதிகமாகவே கேட்கத் தொடங்கி உள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
