பரமக்குடி: சவடு மண் வியாபாரியிடம் ரூ. 50 ஆயிரம் லஞ்சம்; வருவாய் கோட்டாட்சியர் சிக்கியது எப்படி?

பரமக்குடி அருகே உள்ள செல்லூரைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் பரமக்குடி பகுதியில் சவடு மண் விற்பனை செய்து வருகிறார். இதற்கான அனுமதியினை மாதம் தோறும் பரமக்குடியில் உள்ள வருவாய் கோட்டாட்சியரிடம் பெற வேண்டும்.

இந்த அனுமதியைப் பெற பிரபாகரன், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் சரவண பெருமாளை அனுகியுள்ளார். அப்போது சரவண பெருமாள் சவடு மண் எடுக்கும் அனுமதியை வழங்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

லஞ்சம் வாங்கிய கோட்டாட்சியர் சரவண பெருமாள்

இது குறித்து பிரபாகரன் ராமநாதபுரம் லஞ்சம் ஒழிப்பு போலீஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்களின் ஆலோசனைபடி பிரபாகரன் பரமக்குடியில் உள்ள கோட்டாட்சியரின் வீட்டிற்குச் சென்று ரசாயனப் பொடி தடவிய ரூபாயினை கோட்டாட்சியர் சரவரண பெருமாளிடம் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் லஞ்சம் வாங்கிய சரவண பெருமாளைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.

இதனை தொடர்ந்து கோட்டாட்சியர் சரவண பெருமாள் பரமக்குடியில் தங்கியிருந்த வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது அவரது வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ. 5 லட்சத்து 55 ஆயிரம் சிக்கியது.

இது தொடர்பாக லஞ்சம் பெற்ற கோட்டாட்சியர் சரவண பெருமாளையும், இதற்கு உதவியாக இருந்த கோட்டாட்சியரின் வாகன ஓட்டுநர் சுந்தர் என்பவரையும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

வருவாய் கோட்டாட்சியர்  இல்லம்
வருவாய் கோட்டாட்சியர் இல்லம்

மேலும் மதுரையில் உள்ள கோட்டாட்சியர் சரவண பெருமாளின் வீட்டிலும் சோதனை மேற்கொண்டுள்ளனர். மாநிலத்தில் லஞ்சம் ஊழல் இல்லா ஆட்சி நடப்பதாக முதல்வர் ஜோசப் விஜய் ஒவ்வொரு முறையும் கூறி வரும் நிலையில் உயர் பதவி வகிக்கும் கோட்டாட்சியர் ஒருவரே லஞ்ச வழக்கில் சிக்கியிருப்பது மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.