Magudam: 14 மாதங்கள் சிலரால் நடிக்க முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன்! - விஷால்
நடிகர் விஷால் இயக்கி, நடித்திருக்கும் மகுடம் திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. துஷாரா விஜயன், அஞ்சலி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தனது டைரக்ஷன் அறிமுகம் குறித்தும், மறைந்த தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி அவர் மீது வைத்த நம்பிக்கை குறித்தும் பேசியிருக்கிறார்.
விஷால் பேசுகையில், "ஒவ்வொரு நடிகரின் திரைப்பயணத்திலும் ஏதேனும் ஒரு கட்டத்தில் இக்கட்டான சூழ்நிலை உருவாவது இயல்பு. அவ்வளவுதான், இவர் கதை முடிந்துவிட்டது என்று மற்றவர்கள் நினைக்கும் அளவிற்கான ஒரு காலகட்டம் அது.
அப்படித்தான், சுமார் 14 மாதங்கள் சில நபர்களால் என்னால் நடிக்க முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை எனக்கு ஏற்பட்டது. அந்த இக்கட்டான தருணத்தில்தான் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌதரி சார் எனக்கு மீண்டும் நடிக்க வாய்ப்பளித்தார்.
அதற்காக அவருக்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். அதேபோல், எனது தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், என்னைத் தொடர்ந்து இயங்க வைத்து உங்கள் முன்னால் நிற்க வைத்த என் வருங்கால மனைவி சாய்தன்ஷிகாவிற்கும் நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.
ஆர்.பி. சௌதரி சார் என் மீது வைத்த நம்பிக்கை ஒருபுறம் என்றால், திருப்பூர் சுப்பிரமணியம் அண்ணன் கொடுத்த ஊக்கமும் நம்பிக்கையும்தான் மகுடம் திரைப்படம் இவ்வளவு சிறப்பாக வர முக்கியக் காரணம்.
அவர் என் மீது வைத்த நம்பிக்கை வீண்போகக் கூடாது என்பதற்காகவே எனது உழைப்பை இன்னும் அதிகமாகக் கொடுத்தேன். இந்தத் திரைப்படம் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.
ஏனெனில், கேமராவுக்கு முன்னால் நடிகனாகவும், கேமராவுக்குப் பின்னால் இயக்குநராகவும் ஸ்பிளிட் பெர்சனாலிட்டி போல நான் செயல்பட வேண்டியிருந்தது. நான் நடிக்கும்போது எடிட் பாயிண்டிற்காக ஆக்ஷன் சொல்லி ஒரு விநாடி கழித்தே நடிப்பேன்.
அதைத்தான் சக நடிகர்களிடமும் கூறினேன். எந்தவித ஈகோவும் இல்லாத சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களும் நடிகர்களும் கிடைத்ததால்தான் இந்தப் படம் இந்த அளவிற்குச் சிறப்பாக உருவாகியிருக்கிறது. நடிகர்களிடம் இருந்து சரியான நடிப்பை எப்படி வேலை வாங்குவது என்பதை நான் இயக்குநர் பாலா அண்ணனிடமிருந்து கற்றுக்கொண்டேன்.
இயக்குநராக வேண்டும் என்பது எனது 35 வருட கனவு. அர்ஜுன் சாரிடம் என்னை உதவி இயக்குநராகச் சேர்க்க எனது தந்தை சுமார் 4.5 மணி நேரம் அவருக்காகக் காத்திருந்தார்.
"உன்னைப் பள்ளியில் சேர்க்க எப்படி வரிசையில் நின்றேனோ, அதேபோல் உன் எதிர்கால வேலை வாய்ப்புக்காகவும் நிற்பேன்" என்று கூறி எனது கனவை நனவாக்கிய என் தந்தைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அதேபோல், சண்டக்கோழி படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று என் அம்மாதான் பிடிவாதமாக இருந்து என்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாற்றினார்" எனப் பகிர்ந்துகொண்டார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

