கடனை வசூலிக்க மிரட்டவோ நள்ளிரவில் போன் பண்ணவோ கூடாது - ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு
கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகள் அதனை வசூலிக்க கடுமையாக நடந்து கொள்வதுண்டு. அதுவும் கிரெடிட் கார்டு போன்றவற்றிற்கு சரியான நேரத்தில் பணம் கட்டவில்லையெனில் இரவு நேரங்களில் போன் செய்து மிரட்டுவது, வீட்டிற்கு ஆள் வருவது போன்ற செயல்களும் நடக்கும். கடன் வசூலிப்பில் கடுமையாக நடந்து கொண்டதால் ஏராளமானோர் தற்கொலையும் செய்திருக்கின்றனர். இதனையடுத்து கடனை வசூலிக்க நிதிநிறுவனங்கள் மற்றும் வங்கிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இதன்படி தங்களது புதிய கடன் வசூலிப்பு நடைமுறையின் கீழ், வங்கிகள் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட கடன் வழங்குநர்கள் கடன் வாங்கியவர்களைத் தொடர்பு கொள்ளும் முறை, கடன் வசூலிப்பு முறை, கடன் வசூலிப்பு முகவர்கள் பேசக்கூடியவை, கடன் வாங்கியவர்களை எந்த நேரத்தில் போனில் அழைக்கவேண்டும் ஆகியவை தொடர்பான கடுமையான விதிகளை வெளியிட்டு அதனை கடன் கொடுக்கும் நிறுவனங்கள் பின்பற்றவேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இந்த விதிகள் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
கடனில் வாங்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் மடிக்கணினிகளைத் தொலைவிலிருந்தே முடக்கும் வசதி உள்ளிட்ட, தொழில்நுட்பம் சார்ந்த மீட்பு நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி ஒழுங்குமுறைச் சட்டகத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது.
பொதுவாக, வங்கிகள் மற்றும் கடன் வசூலிப்பு முகவர்கள் கடன் பெற்றவர்களைக் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரையிலான நேரத்தில் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். இந்த நேரத்திற்கு வெளியே மேற்கொள்ளப்படும் அழைப்புகள் அல்லது நேரடிச் சந்திப்புகள், கடன் பெற்றவர் அதற்கெனக் குறிப்பாகக் கோரியிருந்தாலோ அல்லது அனுமதி அளித்திருந்தாலோ மட்டுமே அனுமதிக்கப்படும். குடும்பத்தில் மரணம், மருத்துவ அவசரநிலை அல்லது திருமண விழா போன்ற சூழல்களின்போது கடன் வாங்கியவர்களைத் தொடர்புகொள்வதைத் தவிர்க்குமாறும் கடன் வசூலிப்பு முகவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கடன் வாங்கியவரை அச்சுறுத்தும், தகாத அல்லது மிரட்டும் வகையிலான வார்த்தைகளை பயன்பாட்டையும் தடை செய்துள்ளது. கடன் வசூலிப்பு அடையாளம் தெரியாதவர்களிடமிருந்தோ அல்லது அச்சுறுத்தும் வகையிலோ அழைப்புகளைச் செய்யவோ, கடன் வாங்கியவர்களைத் திரும்பத் திரும்பத் தொடர்பு கொள்ளவோ, அவர்களைப் பொதுவெளியில் அவமானப்படுத்தவோ அல்லது அவர்களின் குடும்பம், சொத்துக்கள் அல்லது நற்பெயருக்கு அச்சுறுத்தல் விடுக்கவோ கூடாது.
அதோடு கடன் கொடுத்தவர்கள் சமூக ஊடகங்களையும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. கடன் வாங்கியவரை அவமானப்படுத்தும் நோக்கில் அவரது தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள், காணொளிகள் அல்லது ஒலிப்பதிவுகளை சமூக ஊடகங்களில் பதிவிடுவது அனுமதிக்கப்படாது.
கடன் வாங்கியவரின் வீட்டிற்கு நேரடி வருகைகள் தொடர்பாகவும் புதியதொரு வெளிப்படைத்தன்மை முறை கொண்டுவரப்பட்டுள்ளது. கடன் வசூலிப்பு பணிகளை மேற்கொள்ளும் முகவர்கள் வருகைக்கு முன்னதாகவே, குறைந்தது ஒரு நாளுக்கு முன்பாவது கடன் பெற்றவருக்கு அது குறித்துத் தெரிவிக்கப்பட வேண்டும். பொதுவாக, கடன் பெற்றவர்களை அவர்கள் விரும்பும் இடத்திலேயே தொடர்பு கொள்ள வேண்டும். அவர்கள் எந்த இடத்தையும் குறிப்பிடாத பட்சத்திலோ அல்லது குறிப்பிட்ட இடத்திற்குத் தொடர்ந்து வராமல் இருந்தாலோ, கடன் வசூல் முகவர் அவர்களின் வீட்டிற்கோ அல்லது பணிபுரியும் இடத்திற்கோ நேரில் சென்று சந்திக்கலாம். கடன் மீட்பு முகவர்கள் தங்களது அடையாள அட்டை, அங்கீகாரக் கடிதம் மற்றும் தொடர்பு முகவரி ஆகியவற்றை உடன் வைத்திருக்க வேண்டும்.
வங்கிகள் கடன் மீட்புக்காக மேற்கொள்ளப்படும் உரையாடல்களைப் பதிவு செய்ய வேண்டும். அழைப்புகளின் நேரம் மற்றும் எண்ணிக்கை போன்ற விவரங்களைப் பராமரிக்க வேண்டும். இந்த பதிவுகள் பொதுவாக குறைந்தது ஆறு மாதங்களுக்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

