சிறப்பு தரிசனம் செய்த பிரேமலதா; மின்னலை விழுங்கிய எடப்பாடி பழனிசாமி! - சட்டமன்றம் ஹைலைட்ஸ்!
சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் மூன்றாம் நாள் கூட்டம் இன்று நடந்திருந்தது. வாதம்...விவாதம்...பதிலடி என கட்டா குஸ்தியா நீண்ட இன்றைய நாளின் சில ஹைலட்ஸ் இங்கே!
வெள்ளிக்கிழமை என்பதால் சட்டமன்றத்தின் வாயில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு தரிசனத்தை முடித்துவிட்டுதான் பிரேமலதா விஜயகாந்த் அவைக்குள்ளேயே சென்றார். ஒன்பதரை மணிக்கே அவைக்குள் சென்றாலும் அவர் பேச ஆரம்பிக்கும் போது மணி இரண்டை தொட்டுவிட்டது. எல்லாருமே பசி மயக்கத்தில் இருந்தார்கள்.
அந்த சமயத்தில், அரசுகள் கடன் வாங்குவதை நாம் குறை சொல்ல முடியாது. ஏனெனில், நமக்கு பள்ளிகளிலிருந்தே கடன் வாங்கிதான் கூட்டல் கழித்தல் கணக்குகளை சொல்லிக் கொடுக்கிறார்கள். அதனால்தான் ஒவ்வொரு குடும்பமும் கடனில் இருக்கிறது. ஜப்பானில் எல்லாம் கடன் வாங்கி கணக்கை தீர்க்க சொல்லிக் கொடுக்கமாட்டார்கள். இருப்பதற்குள்ளாகவே மாணவர்களுக்கு கணக்கை தீர்க்க கற்றுக் கொடுப்பார்கள் என ஏன் கடன் சுமை ஏற்படுகிறது என்பதற்கு ஜார்ஜ் கோட்டையை நடுங்கும் அளவுக்கு ஒரு காரணத்தை சொல்லி கிறங்கி கிடந்த உறுப்பினர்களுக்கு ஊசியேற்றிவிட்டார்.

காலை 9:30 மணிக்கே அவை தொடங்கிவிட்டது. காவிரி தீர்மானம், ஒன்றிய அரசு நியாயமான வரிப்பகிர்வை செய்ய வேண்டிய தீர்மானத்தையெல்லாம் முடித்துவிட்டு 11:20 மணிக்குதான் வாதத்துக்குள் அவை நுழைந்தது. இன்று 10 எம்.எல்.ஏக்கள் பேச திட்டமிட்டப்பட்டிருந்தது. முதலில் ஆரம்பித்த முன்னாள் அமைச்சர் ரகுபதியே முக்கால் மணி நேரத்துக்கு சளைக்காமல் சண்டை செய்ய நேரம் வேக வேகமாக ஓடியது. மதியம் ஒன்னரை மணிக்குள் கூட்டத்தை முடிக்க சபாநாயகர் திட்டமிட்டிருந்தார். ஆனால், அப்போது நான்கு எம்.எல்.ஏக்கள் மட்டும்தான் பேசி முடித்திருந்தனர். இதனால் அவை நீட்டிக்கப்படுகிறது என சபாநாயகர் அறிவித்தார். கடைசியாக மார்கண்டேயன் பேசி முடிக்கையில் மணி மூன்றே கால் ஆகிவிட்டது. இடையிடையே எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் எழுந்து போய் மதிய உணவை முடித்துவிட்டு வந்துவிட்டனர். ஆனாலும் நீண்ட நேரம் நடந்த விவாதத்தால் டயர்ட் ஆகியே இருந்தனர்.
இதுவரை அவை நிகழ்வு முழுவதுக்கும் இருக்கும் முதல்வர் விஜய், இன்றெல்லாம் மதிய சாப்பாட்டு வேளையில் கிளம்பிவிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் அவையை விட்டு அவர் அறைக்கு வந்துவிட்டார். எப்போதும் எல்லா பத்திரிகையாளர்களுக்கும் பேட்டி கொடுத்துவிட்டு செல்லும் சௌமியா அன்புமணி இன்று களைப்பில் யாருக்கும் தனியாக பேட்டி கொடுக்காமலேயே சென்றார்.
உள்ளே அவை நடந்துகொண்டிருக்க வெளியே கோணிப்பையை அணிந்து கொண்டு பயிர்க்கடன் தள்ளுபடி வேண்டி விவசாயிகள் போராடி கைதாகிக் கொண்டிருந்தனர்.

தவெக எம்.எல்.ஏ தஞ்சை சரவணனுக்கும் இன்று பேச வாய்ப்பு கொடுக்கப்பட்டது. நீங்கள் நடித்ததோ கெத்து. நீங்கள்தான் தமிழ்நாட்டின் சொத்து பாணியில் விஜய் நடித்த படங்களை காவலன், நண்பன் என வரிசையாக கட்டி புகழ் மாலை என மூக்கில் நெடி ஏறும் அளவுக்கு முதல்வரை புகழ்ந்து தள்ளினார். ஓஹோ...அமைச்சர் பதவி எதிர்பார்க்குறாப்ல போல... என்கிற அமைச்சர் புஸ்ஸி ஆனந்தின் மைண்ட் வாய்ஸ் நமக்கே கேட்டது. இதன்பிறகு நடந்ததுதான் ஹைலைட். அரைமணி நேரமாக முதல்வரை புகழ்ந்து பாட்டாக படித்துவிட்டு என்னுடைய தொகுதி மக்களின் கோரிக்கையை சீட்டில் எழுதி தருகிறேன் என சபாநாயகரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்துவிட்டார். அது மக்கள் மன்றமா...துதிபாடும் அரங்கமா என்கிற சந்தேகம் எழுந்தது.

துதி பாடுறதுல எங்களை மிஞ்ச முடியுமா என்கிற தொனியில் எழுந்த அதிமுகவின் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மின்னலை விழுங்கி மின்சாரத்தை கொப்பளிக்கும் எடப்பாடியார் என ஷாக் கொடுக்க தொண்டையில் மின்னல் கீற்று சிக்கியதை போல வினோதமாக விழித்தார் எடப்பாடி பழனிசாமி. சட்டமன்ற சன்னிதானம்....வானவில்லுக்கு வளைகாப்பு என அக்ரி கிருஷ்ணமூர்த்தி அடித்த பன்ச்செல்லாம் பட்டாசாக இருந்தது.
இன்றைக்கு அவையை பார்க்க பார்வையாளராக நடிகர் ஜெய்யும் வந்திருந்தார். அவரும் தன் பங்குக்கு அண்ணன் தளபதி வாழ்க என சட்டையை சுழற்றியிருந்தால் அவை மனநிம்மதியோடு நிறைவு பெற்றிருக்கும். கட்சித் தலைமையை நோக்கிய துதிபாடல்களை தடை செய்யும் வகையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி விஷயத்தை மட்டுமே பேச வைத்தாலே அவையை மிக சீக்கிரமாக நடத்தி முடித்து பிரயோஜனமான வேலைகளை பார்க்க முடியும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


