TNPL 2026: சச்சினின் அதிரடி... நிதிஷின் போராட்டம் - சேலத்தை வீழ்த்திய கோவை கிங்ஸ்!
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2026 தொடரின் 4-வது லீக் போட்டி, திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் கோவை கிங்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் பரபரப்பாக நகர்ந்த இந்தப் போட்டியில், சேலத்தை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை கிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ், தொடக்கத்திலேயே ரன்களைச் சேர்க்கத் தொடங்கியது. கோவை கிங்ஸ் அணியின் இன்னிங்ஸில் பி.சச்சின் முக்கிய பங்கு வகித்தார். சேலம் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட அவர், வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் பந்தை எல்லைக்கோட்டுக்கு விரட்டினார்.
42 பந்துகளை எதிர்கொண்ட சச்சின், 77 ரன்கள் விளாசி கோவை அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார். அவரது சிறப்பான ஆட்டத்துக்கு Player of the Match விருதும் கிடைத்தது.
சச்சினின் அதிரடியைத் தொடர்ந்து கோவை அணியின் மற்ற பேட்ஸ்மேன்களும் தங்கள் பங்களிப்பைச் செய்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை கோவை கிங்ஸ் எட்டியது.
195 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சேலம் ஸ்பார்டன்ஸுக்கு தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. கோவை பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க, விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன.
ஆனால் நிதிஷ் ராஜகோபால் மட்டும் ஆட்டத்தை விட்டுக்கொடுக்காமல் போராடினார். தனியாளாக சேலத்தின் ஸ்கோரை முன்னோக்கி நகர்த்திய அவர், 69 ரன்கள் குவித்தார். நிதிஷ் களத்தில் இருந்ததால் ஒரு கட்டத்தில் சேலம் இலக்கை நெருங்குமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.

ஆனால் கோவை பந்துவீச்சாளர்கள் கடைசி வரை அந்த அழுத்தத்தைத் தொடர்ந்தனர். இறுதியில் சேலம் ஸ்பார்டன்ஸ் 19.4 ஓவர்களில் 160 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
பந்துவீச்சில் தீபன் லிங்கேஷ் 3/14 என அசத்தினார். இதன்மூலம் கோவை கிங்ஸ் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் சச்சினின் அதிரடியும், பந்துவீச்சில் கோவை அணியின் கட்டுப்பாடும் சேர்ந்து இந்த வெற்றியை வசப்படுத்தியது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


