``ஆதவ் அர்ஜுனா தான் சீட் வாங்கி கொடுத்தார்..! - சட்டமன்றத்தில் ரகசியத்தை உடைத்த திமுக எம்.எல்.ஏ

``அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திமுகவில் இருக்கும்போது அவர்தான் எனக்குச் சீட் வாங்கிக் கொடுத்தார்" என்று திமுக எம்.எல்.ஏ ரிஷிவந்தியம் கார்த்திகேயன் கூறியது, அவை முழுவதும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயன், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பெயரைக் குறிப்பிட்டு, "நானும் அவரும் நண்பர்கள்" எனப் பேசினார். அப்போது குறுக்கிட்ட துணைச் சபாநாயகர் ரவிசங்கர், பெயரைக் குறிப்பிடாமல் அமைச்சர் என்று மட்டும் குறிப்பிட்டுப் பேசுமாறு அறிவுறுத்தினார்.

ஆதவ் அர்ஜுனா

அப்போது பேசிய திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயன், ``எங்களுக்கு இடையிலான நட்பைப் பேரவைத்தலைவர் பிரிக்க வேண்டாம். ஆதவ் அர்ஜுனா திமுகவில் இருந்தபோது என்னை அழைத்துச் சென்று கட்சித் தலைமையிடம், அவரின் சொந்தக்காரர் என்று அறிமுகப்படுத்தி, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார்" எனப் பேசியது, அவை முழுவதும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

அப்போது பேசிய நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், ``அமைதியாக அமர்ந்திருக்கும் பொதுப்பணித்துறை அமைச்சரை எதற்காகக் கோத்துவிடுகிறீர்கள்" எனக் கேட்டது, மேலும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.