அதை உங்க அப்பாவிடம்தான் கேட்கணும், அவரை இங்க காணோம்..!- ஆதவ் அர்ஜுனா Vs உதயநிதி
சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ்மாக் தொடர்பான விவாதத்தின்போது, ``717 கடைகளை முழுமையாக மூடிவிட்டோம். எந்தெந்த கடைகளை மூடினோம் என்பதை கடை எண்களோடு தெரியப்படுத்தியிருக்கிறோம்.
மக்களுக்கு இடையூறான கடைகளை கடை எண்ணோடு புகார் கொடுத்தால், உடனடியாக அந்தக் கடையை இடமாற்றம் செய்வோம்.
ஆன்லைனில் மது விற்பனை செய்யவில்லை. பணமில்லா பரிவர்த்தனைக்காக மட்டுமே ஆன்லைன் முறை கொண்டு வரப்படுகிறது.
ஆன்லைனில் மது விற்பனை என்பது தவறான கருத்து" என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
அதற்கு பா.ம.க எம்.எல்.ஏ கணேஷ் குமார், "மதுவை ஒரு வருமானமாக பார்க்கக் கூடாது. மதுவை அரசே ஊக்குவிக்கக் கூடாது. மதுவினால் வருகிற வருமானத்தை பெருக்குகிறோம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது. ஓர் அரசு மதுவை ஒழிக்கும் முயற்சியிலேயே ஈடுபட வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் விக்னேஷ் , "கடந்த ஆட்சியில் இந்தியா முழுவதும் மதுவை தடை செய்தால்தான் தமிழகத்திலும் தடை செய்ய முடியும் என்றனர். நாங்கள் மதுவுக்கு எதிரானவர்கள். மதுவில் வருமானம் பெருகுவதை நாங்கள் விரும்ப மாட்டோம். மதுவில் ஊழலை ஒழித்ததால்தான் வருமானம் கூடும் என்கிறோம்" என்று கூறினார்.
தவிர, "எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த கடைகள் மூடப்பட்டிருக்கின்றன என மாவட்ட நிர்வாகங்களுக்கே தெரியவில்லை. மதுவை நீங்கள் எப்படி குறைக்கப் போகிறீர்கள்? ஆண்டுக்கு இத்தனை கடைகளை மூடலாம் என எதுவும் திட்டம் இருக்கிறதா?
நேரு பிரதமராக இருந்த போது மதுக்கடைகளை மூட எல்லா மாநிலத்துக்கும் ஒரு கமிட்டியை அனுப்பினார். அப்போது காங்கிரஸ் தரப்பில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது என்றனர். அதை இங்கே பதிவு செய்கிறேன். அமைச்சர் விக்னேஷ் சிறு வயதாக இருந்தாலும் நன்றாகப் பேசுகிறார். ஆனால், போகிற போக்கில் ஊழல் என்கிறார். மேடையில் பேசுவதைப் போல இங்கே பேசக்கூடாது. ஆதாரத்தோடு பேசவேண்டும்" என்று திமுக எம்.எல்.ஏ எ.வ.வேலு பேசினார்.

"டாஸ்மாக்கில் என்னென்ன ஊழல் நடந்தது... யார் யாருக்கு Party Fund சென்றது என விரிவாக அறிக்கை தயார் செய்து அமலாக்கத்துறை தமிழக அரசுக்கு அனுப்பியது. ஆனால், அப்போதைய அரசு அதை வைத்து வழக்குப் பதிவு செய்யவில்லை" என்று அமைச்சர் அருண்ராஜ் கூற எதிர்க்கட்சியினர் லாட்டரி... லாட்டரி என கோஷமிட்டனர்.
உடனே, ``லாட்டரி கம்பெனியிடம் நீங்கள் ஏன் 900 கோடி ரூபாய் வாங்கினீர்கள்?" என்று ஆதவ் கேட்க, "900 கோடி ரூபாய் கொடுத்தது ஆதவ்வின் மாமாதான். நீங்கள் அவரிடமே கேட்டுக் கொள்ளலாம்" என்று உதயநிதி பதில் அளித்தார்.
அதற்கு, "அதை உங்க அப்பாவிடம் தான் கேட்க வேண்டும். அவர் தான் பணம் வாங்கியிருக்கிறார். உங்கள் அப்பாவை இங்கு காணவில்லை" என்று ஆதவ் கூற, தவெக-வினர் கைதட்டினர். எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


