பேப்பர் படித்திருந்தாலே விஷயம் தெரிந்திருக்கும் - விஜய் vs உதயநிதி ; சட்டசபையில் காரசாரம்

தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் " மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை என்ன செய்தது? மேகதாது அணைகட்ட கர்நாடகா அரசு தீவிரம் காட்டுகிறது.

தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தாதது ஏன்? முழு பயிர் கடன் தள்ளுபடி என வாக்குறுதி அளித்தீர்களே அது என்ன ஆனது? மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை செய்தது என்ன? " என கேள்வி எழுப்பினார்.

விஜய்

அதற்கு பதில் அளித்த விஜய், " காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சில விஷயங்களை கேட்டிருக்கிறார்கள். காவிரி நம்முடைய உயிர் ஆதாரம். அதனால் அதை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் இல்லை. பிரதமருக்கும் கடிதம் எழுதியிருக்கிறோம்.

ஜல்சக்தி துறை அமைச்சர் காவிரி பற்றி முழுமையாக குறிப்பிடாத போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை எடுத்துக் காட்டி பிரதமருக்கு நேர்முக கடிதம் எழுதினோம். தமிழகத்தின் உரிமையை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.

சட்டப்படி பிரச்னையை அணுக தயாராக இருக்கிறோம். ஆனாலும் ஒரு முறை முயன்று பார்க்கலாம் என்றுதான் கர்நாடகாவுடன் பேச நினைத்தேன். பகை நாடுகளே பேசும்போது பக்கத்து மாநிலங்கள் ஏன் பேசக்கூடாது என்றுதான் அந்த முயற்சியை எடுத்தேன். அதில் அவமானம் நேர்ந்தால் என்ன செய்வது என்று கேட்டார்கள்? அப்படி நேர்ந்தால் தமிழக மக்களுக்காக அதையும் தாங்கிக் கொள்கிறேன் என்றேன்.

காவிரி நதி நீர் பங்கீட்டிலும் மேகதாது விவகாரத்திலும் தமிழக உரிமையை விட்டுக் கொடுக்கவே மாட்டோம். அதுதான் எங்களின் நிலைப்பாடு. கர்நாடகாவில் சில அணைகள் கட்டப்பட்டது குறித்து 1969 இல் சபையில் ஒரு விவாதம் நடந்திருக்கிறது.

அப்போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்தது யார்? ஏன் அணை கட்ட விட்டீர்கள் என கேட்க விரும்பவில்லை. அந்த மலிவு அரசியலை நான் செய்ய விரும்பவில்லை. அப்போதிருந்த எதிர்க்கட்சித் தலைவர் கருத்திருமன் காவிரியில் சம்பந்தப்பட்ட ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் கூடிப் பேசி முடிவெடுக்க வேண்டும் என்றார்.

விஜய் vs உதயநிதி ஸ்டாலின்
விஜய் vs உதயநிதி ஸ்டாலின்

ஆனால், இப்போது நிலைமை மாறி விட்டது. குறுவை சாகுபடிக்கான நிவாரணத்தை ஏற்கனவே வழங்கிவிட்டோம். அரசியலே நாங்கதான் என சொல்பவர்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது என தெரியவில்லை. முன்ன பின்ன பேப்பர் படித்திருந்தாலே விஷயம் தெரிந்திருக்கும்" என்றார்.

இதற்கு பதில் கொடுக்கும் வகையில் பேசிய உதயநிதி, " சிறப்பு நிதியாக நீங்கள் 130 கோடி ரூபாய் நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள். அது எல்லார் ஆட்சியிலும் கொடுக்கக்கூடிய ஒன்று தான். ஆனால் அவர்கள் வறட்சி நிவாரண நிதி கேட்கிறார்கள். அதற்கான வித்தியாசத்தை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். காலையில் பேப்பர் படித்தால் மட்டும் போதாது. அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி, விவசாயிகளிடம் பேசி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என்றிருக்கிறார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், ``வறட்சி பாதிப்புகளை வழக்கமாக செப்டம்பர் மாத இறுதியில் தான் கணக்கெடுப்பார்கள். அது தான் வழக்கம்" என்றார்,

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.