மைதானத்தில் திடீரென தாக்கிய மின்னல்; சுருண்டு விழுந்த வீரர் மரணம்... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!

தாய்லாந்தில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியின்போது நடந்த துயர சம்பவம் உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தென் தாய்லாந்தின் நராதிவாத் (Narathiwat) மாகாணத்தில் நடைபெற்ற கோலோக் எஃப்ஏ கப் (Golok FA Cup) தொடரில் கனமழை பெய்துகொண்டிருந்தபோதும் போட்டி தொடர்ந்து நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் மைதானத்தின் நடுப்பகுதியை தாக்கியது. அந்த நொடியில் 24 வயதான வீரர் சஃப்வான் அவே (Sofwan Awae) மைதானத்திலேயே சரிந்து விழுந்தார். அருகில் இருந்த வீரர்களும் அதிர்ச்சியடைந்தனர். சிலர் உடனடியாக அவரை நோக்கி ஓடி உதவ முயன்ற காட்சிகளும் வைரலாகும் வீடியோவில் பதிவாகியுள்ளன.

உடனடியாக மருத்துவக் குழுவினர் வந்து முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சஃப்வான் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் மேலும் 12 வீரர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் யாலா எஃப்சி (Yala FC) அணியில் இணைந்திருந்த சஃப்வான், திறமையான இளம் வீரராக அறியப்பட்டவர். அவரது மறைவுக்கு கால்பந்து ரசிகர்களும், விளையாட்டு அமைப்புகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், மோசமான வானிலை நிலவியபோதும் போட்டியை ஏன் நிறுத்தவில்லை என்ற கேள்வியை சமூக வலைதளங்களில் பலரும் எழுப்பி வருகின்றனர்.இந்த சம்பவம் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பது எவ்வளவு அவசியம் என்பதை இந்தச் சம்பவம் நினைவூட்டியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.