என்னப்பா சொல்ல மாட்டீங்களா... - உதயநிதியின் காரில் ஏற முயன்ற எடப்பாடி பழனிசாமி!

சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவை நிகழ்வுகளை முடித்து விட்டு கிளம்பிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவறுதலாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் காரில் ஏற முயன்றார். பின்னர் சுதாரித்துக் கொண்டு உடனடியாக தன்னுடைய காரை நோக்கி சென்ற சம்பவம் சட்டமன்ற வளாகத்தில் கலகலப்பூட்டியது.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு இதேமாதிரி தவறுதலாக உதயநிதியின் காரில் ஏற முயன்று பின்னர் தன்னுடைய காரில் ஏறி சென்றிருந்தார். அதைப் பற்றி உதயநிதியே ஒரு முறை நகைச்சுவையாக சட்டசபையில் பேசியிருந்தார். இந்நிலையில், இன்றும் அப்படியொரு சம்பவம் நடந்திருந்தது.

சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் உள்ளே செல்லும் நுழைவு வாயில் 4 க்கு வெளியே போடப்பட்டிருக்கும் பந்தலுக்குள் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் கார் நிறுத்தப்பட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமியின் கார் பந்தலுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தது. உதயநிதிக்கு முன்பாகவே எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களை சந்தித்துவிட்டு கிளம்ப தயாராகினார். அப்போது எடப்பாடியின் காரை அவரது ஓட்டுநர் எடுத்து வந்து உதயநிதியின் கார் முன்பாக நிறுத்தினார். இந்த சமயத்தில்தான் எஸ்.பி.வேலுமணியும் சி.வி.சண்முகமும் அமைச்சர் ஆனந்தை சந்தித்திருந்தனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கிளம்புவதற்காக வெளியில் வந்த எடப்பாடியிடம் எஸ்.பி.வேலுமணி குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்க விரும்பாத எடப்பாடி பழனிசாமி வேகவேகமாக கிளம்ப நினைத்தார். அந்த அவசரத்தில்தான் தவறுதலாக உதயநிதியின் கார் கதவை திறந்துவிட்டார். உடனே பாதுகாவலர்கள் விஷயத்தை சொல்ல சுதாரித்த எடப்பாடி என்னப்பா சொல்ல மாட்டீங்களா... என்றபடியே தன்னுடைய காரை நோக்கி சென்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.