திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட்; சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
சென்னையில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் பேசியது சர்ச்சையானது.
இதனைத்தொடர்ந்து மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தரபாண்டியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி தரப்பில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி, பொன்முடியின் கோரிக்கையைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அவரை செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, விசாரணையை செப்டம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

