தவெகவின் பட்ஜெட்டிற்கு ஜீரோ மதிப்பெண்; ஆனால், நிதியமைச்சருக்கு திமுகவின் நன்றி! - உதயநிதி ஸ்டாலின்
2026-27 நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இது தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் ஆகும்.
நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 3) தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைப் பேச்சு... நேற்று (ஆகஸ்ட் 4) கைது... எனக் கடந்த இரு நாள்களாகப் பரபரப்பாக இருந்தார் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.
பட்ஜெட் தாக்கலுக்காகத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு அவர் வரும் போது, திமுக அமளியில் ஈடுபடுமா... பிரச்னை ஏற்படுமா என்கிற கேள்விகள் இருந்தன.
ஆனால், முழு பட்ஜெட் தாக்கலையும் திமுக எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் தான் கடந்தது.
உதயநிதி ஸ்டாலின் பேச்சு
இதன் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், "தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த அரசு திருத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
இந்த அரசு அமைந்து கிட்டத்தட்ட 100 நாள்கள் முடிவடைந்துள்ள நிலையில், அரசின் செயல்பாடுகளுக்கு மதிப்பெண் வழங்கினால் அது மிகப்பெரிய ‘பூஜ்ஜியம்’தான்.
அதேபோன்றுதான் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டும் மிகப்பெரிய பூஜ்ஜியமாகவே அமைந்துள்ளது.
மாற்றம்... மாற்றம்...
தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற முடியாது என்றாலும், அவற்றை எப்போது நிறைவேற்றப்போகிறீர்கள் என்பதற்கான கால அட்டவணையையோ அல்லது திட்ட வரைபடத்தையோ வழங்குமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
திராவிட மாடல் ஆட்சியில் அப்போதைய முதலமைச்சரால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தின் மீதும் புதிய அரசு ஸ்டிக்கர் மட்டுமே ஒட்டியுள்ளது.
ஆட்சிக்கு வரும்போது மாற்றம் என்று கூறியவர்கள், இப்போது திட்டங்களின் பெயர் மாற்றத்தை மட்டுமே செய்துகொண்டிருக்கிறார்கள். கடந்த 10 நாள்களாக முதலமைச்சர் அதிகாரிகளுடன் நடத்திய புகைப்படக் காட்சிகள் அனைத்தும் இந்தப் பெயர் மாற்றத்துக்காகத்தானா என்று தெரியவில்லை.

தங்க மோதிரத் திட்டம்
தேர்தல் வாக்குறுதியில் ‘தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்’ தமிழ்நாட்டில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் அளிக்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால், தற்போதைய பட்ஜெட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட்டில் எந்தத் திட்டமும் இடம் பெறவில்லை.
இந்தியாவில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது என நிதிமைச்சர் குறிப்பிட்டதற்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறிய அவர், இதன் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனைகளை அரசு ஒப்புக்கொண்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
பெயர் மாற்றங்கள்
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், அயலக கல்வி உதவித் திட்டம், அயோத்திதாசர் ஆதி திராவிடர் வாழ்விட மேம்பாட்டு திட்டம், ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் போன்ற அனைத்தும் முந்தைய திராவிட மாடல் அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களாகும். தற்போது அவற்றின் மீது வெற்றி என்ற ஆளுங்கட்சியின் பெயரைச் சேர்த்துப் புதிய ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்.
அன்புச் சோலை திட்டம் - முதியோர் பொழுதுபோக்கு மையங்கள் என மாற்றப்பட்டுள்ளது.
உலகம் உங்கள் கையில் லேப்டாப் திட்டம் - வெற்றி மடிக்கணினி திட்டம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
கலைஞர் கனவு இல்லம் - வெற்றி வீடு திட்டம் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
தகைசால் பள்ளிகள் மற்றும் முதல்வர் படைப்பகங்கள் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன. முதலமைச்சர் படைப்பகங்கள் திட்டம் டிஜிட்டல் நூலகம் என மாற்றப்பட்டு வெறும் 10 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
நன்னிலம் திட்டம் - மண்ணின் மகள் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
44,500 கோடி ரூபாயாக..!
கடந்த ஆட்சியில் கல்வித்துறைக்காக 48,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், இப்போதைய அரசு முதன்முறையாக அதைக் குறைத்து 44,500 கோடி ரூபாயாக ஒதுக்கியுள்ளது.
காவிரி நீர் வரத்து குறைந்த சூழ்நிலையை இந்த அரசே ஏற்படுத்தியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலை மாதத்தில் காவிரி நீர் வரத்து சரிந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மேகதாது அணை கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தும் தைரியம் இந்த அரசுக்கு இல்லை.
முழு பயிர்க்கடன் தள்ளுபடி என்று உறுதியளித்துவிட்டு, தற்போது நிபந்தனைகளை விதித்து விவசாயிகளை ஏமாற்றி வருகின்றனர்.

மின்சாரக் கட்டணம்
விவசாயிகளின் இந்தப் பிரச்னைகளைத் திசைதிருப்பவே நேற்றைய தினம் நமது வீட்டிற்குள் புகுந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
கடந்த 100 நாள்களில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
கடந்த ஐந்து வாரங்களில் மட்டும் நான்கு லாக்-அப் மரணங்களும், ஐந்து சாதி ஆணவப் படுகொலைகளும் நிகழ்ந்துள்ளன.
மூன்று லட்சம் குடும்பங்களுக்கு மின்சாரக் கட்டணம் வழக்கத்தை விட பல மடங்கு உயர்ந்து வந்துள்ளது. இந்தியாவே நீட் தேர்வை எதிர்த்துப் போராடும் சூழலில், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போராடும் மாணவர்கள் மீது இந்த அரசு தடியடி நடத்தி வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை..?
அரிசி விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. சட்டமன்றத்தில் முதலமைச்சர் பதிலளிக்காமல், அவருக்குப் பதிலாகப் பொதுப்பணித்துறை அமைச்சர் பதிலளிப்பது நகைச்சுவையாக உள்ளது.
வாக்குறுதிகளை நிறைவேற்ற கூடுதல் அவகாசம் வேண்டும் என முதலமைச்சர் கேட்கிறார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்குவதாகக் கூறியிருந்த போதிலும், பட்ஜெட்டில் அதுபற்றி எந்த அறிவிப்பும் இல்லை.
வெறும் பெயர் மாற்றத்தை மட்டுமே செய்துவரும் இந்த அரசிடம், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடர் முழுவதும் மக்கள் பிரச்னைகள் குறித்து ஆணித்தரமாகக் கேள்விகள் எழுப்பப்படும்" என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


