Kollywood: அஜித் டு கார்த்திக் சுப்புராஜ்; களைகட்டும் அப்டேட்கள் - இது கோலிவுட் புதிய அறிவிப்புகள்!
கடந்த மூன்று நாட்களாகத் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அடுத்தடுத்த அப்டேட்கள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன.
எதிர்பார்க்கப்பட்ட படங்களின் ரிலீஸ் தேதி அறிவிப்பு, புதிய படங்களின் அறிவிப்பு எனப் பல அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகின்றன. அந்த அப்டேட்களையெல்லாம் இங்கு பார்ப்போமா...
கார்த்தி - மோகன் ராஜா படம்:
இயக்குநர் மோகன் ராஜாவுக்குச் சினிமாவில் இது 25-வது ஆண்டு. இந்த ஸ்பெஷல் தருணத்தில் நடிகர் கார்த்தியுடன் ஒரு புதிய படத்திற்குச் கை கோத்திருக்கிறார் மோகன் ராஜா. கார்த்தியின் 31-வது படத்தை இவர் இயக்கவிருக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லட்சுமண் குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். படத்தின் மற்ற விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் எனவும் கூறியிருக்கிறார்கள்.
அஜித் அப்டேட்கள்:
இந்த வாரம் அஜித் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சிதான். ஆம், அஜித் நடிக்கும் இரண்டு படங்களின் அப்டேட்கள் இந்த வாரம் வெளிவந்திருக்கின்றன. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அனிருத் இசையில் அஜித்குமார் நடிக்கவிருக்கும் டார்டெவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு டைட்டிலோடு வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் அஜித்குமாரின் மனைவி ஷாலினி அஜித்குமார் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.
பிறகு, இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும், அஜித்தின் ரேஸிங் பற்றிய ஆவணப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த ஆவணப்படத்திற்கு கிளாடியேட்டர்ஸ் - இன் பர்ஷூட் ஆஃப் சேலஞ்சஸ் எனப் பெயரிட்டிருக்கிறார்கள். இந்த ஆவணப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ரசிகர்களுக்காக இதனைத் தியேட்டர் ரிலீஸாகக் கொண்டு வருகிறார்கள்.
ஜீவாவின் தகப்பன்:
தலைவர் தம்பி தலைமையில் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜீவா, இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் நடித்து வருகிறார். இவர் கிடா படத்தை இயக்கியவர். மாமன், கருடன் போன்ற படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு, இந்தப் படம் இந்தாண்டு டிசம்பரில் வெளியாகும் எனவும் அறிவித்திருக்கிறது.

ஒன்ஸ் மோர் ரிலீஸ்:
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஒன்ஸ் மோர் படத்தின் அறிவிப்பு கடந்த 2024-ம் ஆண்டே வெளிவந்திருந்தது. படத்தின் பாடல்களும் வெளியாகி, எதிர்பார்ப்பையும் உருவாக்கியிருந்தன. அப்போதே, படம் 2025-ம் ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என அறிவித்திருந்தனர். ஆனால், அப்போது ரிலீஸ் மாற்றப்பட்டது. இடைவெளிக்குப் பிறகு இப்போது படத்தை ரிலீஸுக்குத் தயார் செய்திருக்கிறார்கள். இம்மாதம் 28-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
மூடர்கூடம் 2:
இயக்குநர் நவீன் இயக்கத்தில் மூடர்கூடம் திரைப்படம், கடந்த 2013-ம் ஆண்டு வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை 13 வருடங்களுக்குப் பிறகு தொடங்கியிருக்கிறார்கள். முதல் பாகத்தில் நடித்திருந்த நடிகர்களே, நவீன் இயக்கும் இந்த இரண்டாம் பாகத்திலும் நடிக்கவிருக்கிறார்கள்.
View this post on Instagram
கார்த்திக் சுப்புராஜின் டோரதி:
கார்த்திக் சுப்புராஜின் 10-வது படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு டோரதி என டைட்டில் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தின் கதை கார்த்திக் சுப்புராஜின் மனதுக்கு மிகவும் நெருக்கமான கதையாம். இதுமட்டுமல்ல, டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிட இப்படம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறதாம். படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிக்கப்பட்டு வருகிற செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


