TVK: உதயநிதி ஸ்டாலின் என்னவொரு டாய்லெட் புரட்சியாளர்! - ஆதவ் அர்ஜூனா அட்டாக்
சட்டமன்றத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதனையொட்டி நேற்றைய தினம் பனையூரில் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, உதயநிதி ஸ்டாலினைக் கடுமையாக விமர்சித்தும், அவருடைய கைது தொடர்பாகவும் பேசியிருக்கிறார்.
அவர் பேசுகையில், "நேற்று ஒரு பெண்ணை அருவருப்பாகவும் அசிங்கமாகவும் பேசிய உதயநிதியை இன்றைக்கு டாய்லெட்டில் இரண்டு மணி நேரம் உட்கார வைத்துவிட்டார்கள். அதுதான் காலம். காலை 8 மணிக்கெல்லாம் காவல்துறை அவர் வீட்டுக்குச் சென்றுவிட்டது.
அங்கே சென்றதும், 8:15 மணிக்கெல்லாம் அவர் வெளியே வந்து, நான் உடைகளை மாற்றிக்கொண்டு வருகிறேன்... டாய்லெட் சென்றுவிட்டு வந்துவிடுகிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால், 8:15 மணிக்கு உள்ளே சென்றவர், காலை 10:15 மணி வரைக்கும் டாய்லெட் ரூமை விட்டு வெளியேவே வரவில்லை. உதயநிதி ஸ்டாலின் என்னவொரு டாய்லெட் புரட்சியாளர்!
அவரின் ஆணவத்தை டாய்லெட்டில் உட்கார வைத்துவிட்டார்கள். தன் வாழ்நாளில் என்றைக்குமே அவர் இரண்டு மணி நேரம் டாய்லெட்டில் உட்கார்ந்திருந்த அனுபவத்தை மறக்கவே முடியாது. காலமும் நேரமும் எப்படி வெறும் 24 மணி நேரத்திற்குள் உங்களின் ஆணவத்தை அடக்கிவிடுகிறது பார்த்தீர்களா.
உண்மையிலேயே தைரியமாக இருந்தால் அவர் 8:15 மணிக்கெல்லாம் வாருங்கள் போகலாம். விசாரணைதானே, எதிர்கொள்ளலாம் என்று கிளம்பியிருக்க வேண்டும். அதில் என்ன இருக்கிறது? நீங்கள்தான் எந்தத் தப்பும் செய்யவில்லையே.

அதாவது, மனிதனாக இருப்பவர்கள் தவறு செய்துவிட்டால், ஆமாம், அந்த நேரத்தில் நான் தவறு செய்துவிட்டேன், அதற்கு வருந்துகிறேன் என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவார்கள். சிறந்த தலைவரான ஜெயலலிதா அம்மையார் கூட, ஆமாம், தவறு நடந்துவிட்டது, விட்டுவிடுங்கள் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார்.
ஆனால், வெளியே வந்துவிட்டுச் சிரித்துக் கொண்டே நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று சொல்கிறார். இதுதான் ஆணவத்தின் உச்சகட்டக் கொடுமை. பெண்களுக்காக இன்றைக்கு நமது தலைவர் குரல் கொடுத்திருக்கிறார். இதுதான் எங்களுடைய தலைவர்." என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

