195 நாடுகளின் தேசியக் கொடிகளை அடையாளம் காட்டி சாதனை; சிறுமியைப் பாராட்டிய குமரி கலெக்டர்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த ஜனார்த்தனன் - ரூபா ஆகியோரது மகள் ஜே.ஆர்.லக்ஷ்மிதா அபார நினைவாற்றல் கொண்டவராக உள்ளார். இச்சிறுமி ஏற்கனவே இரண்டரை வயதில் 184 ஃப்ளாஷ் கார்டுகளை (Flashcards) அடையாளம் கண்டு, அவற்றின் பெயர்களை 5 நிமிடங்கள் 55 விநாடிகளில் கூறி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (India Book of Records) சாதனையைப் பதிவு செய்துள்ளார். இதற்காக அவருக்குச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டுள்ளன. கல்வி சார்ந்த நோக்கில் (Education Purpose) 2 வயதிலேயே சாதனை புரிந்ததற்காக பிரைடு ஆஃப் தமிழ்நாடு அமைப்பின் மூலம் விருது, பதக்கம் மற்றும் போட்டோ பிரேம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த லக்ஷ்மிதா

​தற்போது தனது நான்கரை வயதில், 195 உலக நாடுகளின் தேசியக் கொடிகளை அடையாளம் கண்டு வெறும் 2 நிமிடங்கள் 40 வினாடிகளில் கூறி இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் உலகச் சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் எம்.பிரதாப் சிறுமியைப் பாராட்டினார்.

சான்றிதளுடன் லக்ஷ்மிதா

இதுகுறித்து ஜே.ஆர்.லக்ஷ்மிதாவின் அம்மா ரூபா கூறுகையில், "என் மகள் ஜே.ஆர்.லக்ஷ்மிதா குழந்தையாக இருக்கும்போதே அவளுக்கு டாய்ஸ் வைத்து விளையாடுவது பிடிக்கும். ஃப்ரூட்ஸ், அனிமல்ஸ் டாய்ஸை ஒருமுறை காண்பித்து பெயர்களைச் சொல்லிக் கொடுத்தால், அதைப் புரிந்துகொண்டு மறுபடியும் கேட்டால் சரியாகச் சொல்வாள். அந்த ஆப்பிளை எடு எனச் சொன்னால் சரியாக ஆப்பிளை எடுத்துத் தருவாள். அவளது நினைவாற்றலை சாதனையாக மாற்ற வேண்டும் என முடிவு செய்தேன். அதன் பிறகு பிளாஷ் கார்ட்ஸ் வைத்து சொல்லிக் கொடுத்தேன். அதை நினைவு வைத்து சொல்லியதில், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்தார்.

சிறுமி லக்ஷ்மிதா-வை பாராட்டிய குமரி கலெக்டர் பிரதாப்

​அடுத்த கட்டமாக கொஞ்சம் பெரிய அளவில் சாதனை புரிய வைக்க வேண்டும் என வேர்ல்ட் ரெக்கார்டுக்கு பயிற்சி அளித்தேன். 2 நிமிடங்கள் 40 வினாடிகளில் 195 நாடுகளின் தேசியக் கொடிகளின் பெயர்களைக் கூறி இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்தார். ஜே.ஆர்.லக்ஷ்மிதா இப்போது எல்.கே.ஜி. படித்துக்கொண்டிருக்கிறார். முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், குமரி கலெக்டர் பிரதாப் உள்ளிட்டோர் எங்கள் மகளை பாராட்டினர். எங்களுக்கு இரண்டாவது மகள் பிறந்திருக்கிறார். அந்தக் குழந்தையையும் சாதனை செய்ய வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன்" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.