வைகோ புத்தகத்தை வெளியிடும் ராகுல்; எழுத்தாளரின் அறச்சீற்றமும் காங்கிரஸின் சமாளிப்பும்!
வைகோ கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடும் நிகழ்ச்சி இன்று மாலை டெல்லியில் நடக்கிறது. புத்தகத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் பெற்றுக் கொள்கிறார்.
இந்நிலையில் இந்தப் புத்தக வெளியீட்டு விழா தொடர்பாக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் சமூக ஊடகம் வழியே சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதாவது வைகோவின் புத்தகத்தை வெளியிடத் தகுதியானவர் மு.க.ஸ்டாலின் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இரண்டு முறை இது குறித்துப் பதிவிட்டிருந்த சோ தர்மனிடம் பேசினோம்.
’’தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தெற்குத் திட்டங்குளத்தில் திமுக கிளைச் செயலாளரா இருந்தவன் நான். ஒருகட்டட்துல எந்தக் கட்சியும் வேண்டாம்னுட்டு எழுத்துப் பக்கம் வந்துட்டேன். ஆனா அன்னைக்கு கோபால்சாமி கூட அரசியல் செஞ்சவங்கிற ஒரு முறையில என் கருத்தைச் சொன்னேன். இவ்ளோ வருஷம் டெல்லியில பேசினதை புத்தகமாக்குறது நல்ல விஷயம்தான். ஆனா டெல்லிக்கு இவ்வளவு காலமும் உங்களை அனுப்பி வச்சது யாருங்கிறது முக்கியமில்லையா?
மனுஷனா பிறந்தா நன்றி விசுவாசம் இருக்கணும்ங்க. நான் கூடதான் சாகித்ய அகாடமி விருது வரைக்கும் வாங்கிட்டேன். ஆனா இன்னைக்கும் எந்தக் கூட்டத்துக்குப் போனாலும் கி.ரா-வைத் தொடாம என் பேச்சை முடிக்கவே மாட்டேன். காரணம் எனக்கு இந்தத் துறையில் பாதையைக் காட்டினார்.
மொத்த வருஷத்துல ஒரு பீரியட் என்னவோ அதிமுக ஆதரவுடன் போயிருப்பார். மத்த எல்லா முறையும் திமுக ஆதரவுடனேயே நாடாளுமன்றத்துக்குப் போயிட்டு அங்க பேசினதை புத்தகமா போடுறப்ப ஒரு திமுக காரனுக்குக் கூடச் சொல்லலன்னா என்னங்க அர்த்தம்?
நியாயப்படி திமுக தலைவர் ஸ்டாலின் கையாலதான் புத்தகத்தையே வெளியிட்டிருக்கணும். தேர்தலுக்குப் பிறகு எதிரணிக்குப் போயிட்டாக் கூட ஸ்டாலின் கிட்டப் போய் புத்தகத்தை வெளியிடக் கேட்டா அவர் நிச்சயம் சரினு சொல்லி வந்திருப்பார்.
அதை விட்டுட்டு காலங்காலமா ராஜ்யசபாவுல யாரைத் திட்டித் தீர்த்தீங்களோ அவங்களையே கூப்பிட்டு விழாவை நடத்தறது முரணா இல்லையா? ஈழத் தமிழர்களுக்காக காங்கிரஸ்காரர்களை எவ்வளவு பேசியிருப்பார். அதே காங்கிரஸ் தலைவர் கையால் புத்தகம் வெளியிடறது நல்லாவா இருக்கு? என்னவோ எனக்கு இதைச் சொல்லணும்னு தோணுச்சு, சொல்றேன்’’ என்கிறார்
காங்கிரஸ் கட்சியின் கோபண்ணாவிடம் இந்தப் புத்தக வெளியீட்டு விழா குறித்துக் கேட்டோம்.
‘’காமராஜர் சகாப்தம்னு ஒரு புத்தகம். அதுல காமராஜர் குறிப்பிட்டிருந்த ‘திமுகவும் அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ங்கிற வாக்கியம் இடம் பெற்றிருந்தது. அந்தப் புத்தகத்துக்கு அணிந்துரை எழுதியிருந்தார் கலைஞர். இது குறித்து நானே அவர்கிட்டக் கேட்டேன். ‘அதுல தவறு ஓண்ணுமில்ல, அவர் தன்னுடைய கருத்தைச் சொன்னார். அணிந்துரை நான் தந்தது காமராஜர் மீது வச்சிருந்த மரியாதையால்’னு சொன்னார்.
அரசியல்ல இது மாதிரி ஏகப்பட்ட உதாரணங்கள் சொல்லலாம். இந்திரா காந்தியை திமுக பேசாத பேச்சா? காங்கிரசும் திமுகவும் கூட்டணியில இல்லையா? அதேபோலத்தான் இதுவும்.
பொது எதிரி பாஜகவை வைகோ கடுமையா எதிர்க்கிறார். அந்த ஒரு அடிப்படையில் நாங்க இப்ப ஒரே அணியில் இருக்கோம். இன்னைக்கு அவர் பிரபாகரனை ஆதரிக்கிறதுல எங்களுக்கு உடன்பாடு கிடையாது. அது வேற இது வேற. ரெண்டையும் போட்டு குழப்பிக்காதிங்க’ என்கிறார் இவர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


