மும்பை சித்திவிநாயக் கோயில் உண்டியல் பணம் திருட்டு; ஆண்டுக்கு ரூ.18 கோடியை அபேஸ் செய்த 8 ஊழியர்கள்

அயோத்தி ராமர் கோயிலில் உண்டியல் பணம் திருடப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அது போன்று உண்டியல் பணம் திருடப்படும் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன.

மும்பையில் மிகவும் பிரபலமானது சித்திவிநாயக் கோயில். இக்கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு பக்தர்கள் காணிக்கை செலுத்துகின்றனர். இந்த உண்டியல் பணத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.18 கோடி அளவுக்குத் திருட்டு நடப்பதாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே குற்றம் சாட்டி இருந்தார்.

இக்கோயில் அறங்காவலர்கள் சிலர் மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயிக்கு எழுதிய கடிதத்தை ராஜ் தாக்கரே வாசித்து இக்குற்றச்சாட்டைத் தெரிவித்தார்.

அக்கடிதத்தில், "சில ஊழியர்கள் பணம் திருடி பிடிபட்டுள்ளனர். அவர்கள் பிடிபடுவதற்கு முன்பு, ஒவ்வொரு புதன்கிழமையும் காணிக்கைப் பெட்டியில் சேரும் தொகை ரூ. 50 லட்சத்திற்குள் இருந்தது.

சித்திவிநாயக் கோயில்

ஆனால் அவர்கள் பிடிபட்ட பிறகு, கடந்த மூன்று வாரங்களில் அந்தத் தொகை சுமார் ரூ. 1.5 கோடியை எட்டியுள்ளது. இதன் மூலம், முன்னதாகவே குறிப்பிட்ட அளவு பணம் காணாமல் போய்க்கொண்டிருந்தது என்பது தெளிவாகிறது. இதனால் கோயிலுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ. 18 கோடி இழப்பு ஏற்பட்டு வந்தது.

இதில் உயர் மட்டத்தினர் யாருக்கோ தொடர்பு இருக்கலாம் என்று நாங்கள் வலுவாகச் சந்தேகிக்கிறோம். எனவே இது குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்," என்று அந்தக் கடிதத்தில் உள்ள விவரங்களை அவர் குறிப்பிட்டார். இக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக சிவசேனாவை சேர்ந்த சதா சர்வான்கர் இருக்கிறார்.

சிவசேனாவின் தலைவரும், மூத்த அரசியல்வாதியுமான சதா சர்வான்கர் இது குறித்து அளித்த பேட்டியில், "மார்ச் மாதம் ஒன்பது ஊழியர்களைத் திருட்டு குற்றத்திற்காகப் பிடித்துள்ளோம். திருட்டை நாங்கள் நிறுத்தியவுடன், கோவிலின் வருமானம் மாதத்திற்கு ரூ. 40-45 லட்சத்தில் இருந்து ரூ. 80-90 லட்சமாக அதிகரித்தது," என்றார்.

ராமர் கோயில் நன்கொடைத் திருட்டு விவகாரத்தில் சம்பத் ராய் மற்றும் அனில் குமார் மிஸ்ரா பதவி விலகியதைப் போல, சித்திவிநாயக் கோயில் அறங்காவலர்களும் பதவி விலகுவார்களா என்று கேட்டதற்கு, சர்வான்கரும், மற்றொரு அறங்காவலரான ராகுல் லோந்தேயும் மறுத்துவிட்டனர். "திருட்டை வெளிக்கொண்டு வந்ததற்கு நாங்கள் ஏன் பதவி விலக வேண்டும்?" என்று சர்வான்கர் கேள்வி எழுப்பினார்.

மேலும் கைது செய்யப்பட்டவர் உத்தவ் தாக்கரே ஆட்சிக்காலத்தில் பணியில் நியமிக்கப்பட்ட ஊழியர் என்றும் அவர் தெரிவித்தார். சிவசேனாவின் (உத்தவ்) முன்னாள் மேயர் விஷாகா ராவினால் பணியமர்த்தப்பட்டதாகவும் சர்வான்கர் கூறினார்.

கடந்த 2009ம் ஆண்டு முதல் கோவிலில் பணியாற்றி வந்த ராஜேந்திர பெண்டுர்கர் என்ற ஊழியர், காணிக்கை பெட்டியில் இருந்த பணத்தைத் திருடியதற்காக மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.

சதா சர்வான்கர்
சதா சர்வான்கர்

அடுத்த ஒரு சில நாட்களில், "ஸ்கிம்மிங்" மோசடி மூலம் பணத்தைத் திருடியதற்காக எட்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவரும் நிரந்தர ஊழியர்கள் ஆவர். அவர்களிடமிருந்து ரூ.80,000 மீட்கப்பட்டுள்ளது. மோசடி செய்யப்பட்ட தொகை மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல ஆண்டுகளாக இக்கோயில் தொடர்ச்சியான திருட்டுகள் மற்றும் முறைகேடுகளுக்கு ஆளாகி வந்துள்ளது. 2021-ஆம் ஆண்டில், கட்டணம் பெற்றுக்கொண்டு வரிசைக்கு முந்தியே தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ததற்காகச் சில பூ வியாபாரிகளும் கடைக்காரர்களும் கைது செய்யப்பட்டனர். தரிசனத்திற்கான அனைத்து நேர ஒதுக்கீடுகளையும் (slots) முன்பதிவு செய்து, இணையம் வழியாகவே இந்த மோசடி செய்யப்பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.