உதயநிதி பொதுவில் மன்னிப்பு கேட்க வேண்டும்! - மகளிர் ஆணையத்தில் தவெக புகார்
தஞ்சாவூரில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசிய உரை சர்ச்சையாகியிருந்தது. இதைத் தொடர்ந்து தவெக சார்பில் தேசிய மகளிர் ஆணையத்தில் உதயநிதி மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
அந்தப் புகாரில், காவிரி நீர் பகிர்வு தொடர்பாக உரையாற்றியபோது, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கூட்டத்தில் எழுந்த முழக்கங்களைத் தொடர்ந்து, ஒரு பிரபலமான பெண்ணை குறிவைத்து இரட்டை அர்த்தம் கொண்ட, ஆபாசமான இழிவான கருத்துகளை பேசினார்.
அரசியல் மேடையில் இருந்து பேசப்பட்ட இத்தகைய வார்த்தைகள், பெண்களை வெறும் மதிப்பற்ற பொருளாகக் காணும் மனப்போக்கையும், பொதுவெளியில் பெண்களுக்கு எதிரான கொச்சை வசவுகளையும் இயல்பாக்குகின்றன. இது, பொது வாழ்க்கையில் உள்ள பெண்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதில் மிகவும் ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குவதோடு, மக்கள் பிரதிநிதிகளிடம் எதிர்பார்க்கப்படும் நாகரிகத்தையும் கடுமையாக சீர்குலைக்கிறது.
எனவே, தேசிய மகளிர் ஆணையம் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்:

தஞ்சாவூரில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் அவர் ஆற்றிய பேச்சு மற்றும் அதன் காணொளியை அதிகாரப்பூர்வமாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
பெண்களை இழிவுபடுத்தும் மற்றும் ஆபாசமான கருத்துகளை வெளியிட்டதற்காக விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்புவதுடன், நிபந்தனையற்ற பொது மன்னிப்பையும் கோர வேண்டும்.
பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ், பொது ஆபாசம் மற்றும் பெண்களின் கண்ணியத்தை அவமதித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
பெண்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தை பாதுகாக்கும் தனது சட்டப்பூர்வ பொறுப்பின் அடிப்படையில், தேசிய மகளிர் ஆணையம் இந்த மனுவை உடனடியாக பரிசீலித்து, தக்க நடவடிக்கைகளை எடுக்கும் என நாங்கள் நம்புகிறோம் என கூறப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


