Bike Taxi: அனுமதி கொடுக்கலாமா? வேண்டாமா? என கொள்கை முடிவு எடுங்கள் - நீதிபதிகள் அறிவுறுத்தல்
மதுரையைச் சேர்ந்த நவீன் குமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தமிழகத்தில் ராப்பிடோ, ஓலா, உபர் போன்ற டிஜிட்டல் மைய பைக் டாக்சி சேவைகள் அதிகரித்து வருகின்றன. இவை பலருக்கும் பயனளிக்க கூடிய வகையிலேயே உள்ளன. ஆனால் இந்தச் சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான அரசின் திட்டமோ, விதிகளோ தமிழகத்தில் இல்லை. ஆட்டோ ரிக்சா, டேக்ஸிகளைப் போல பைக் டாக்சி சேவைகள் தனித்து இயங்க முடியாது.
அவை முழுமையாகச் சம்பந்தப்பட்ட டிஜிட்டல் நிறுவனங்களைச் சார்ந்துள்ளன. ஆனால் அந்நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் தங்கள் டிஜிட்டல் தளத்தை இயக்கி வருகின்றன. அதேசமயம் பைக் டாக்சி ஓட்டுநர்கள் மீது அடிக்கடி அபராதம் விதிப்பது, வாகனங்களைப் பறிமுதல் செய்வது, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் குற்ற வழக்குகள் பதியப்படுவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகையில் ஓட்டுநர் தண்டிக்கப்படுகிறார்.
ஆகவே பைக் டாக்ஸிகளை ஒழுங்குபடுத்துவதற்கான ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்கவும், சட்டப்படி உரிமம் வழங்கி பைக் டாக்சி சேவையை நடத்த அனுமதிப்பதற்கான விதிகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
அதுவரை பைக் டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை வழங்கி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன் சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், “பைக் டாக்சிக்கு அனுமதி வழங்குவது குறித்து ஒரு குழு அமைத்து அதன் பிறகு முடிவு எடுக்க முடியும். அதுவரை பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது. விதிகளை மீறி பைக் டாக்சி ஓட்டி வந்தால் அபராதம் விதிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள் குறுக்கிட்டு, “இது குறித்து ஏன் விளம்பரப்படுத்த கூடாது? ஏதேனும் விபத்து நடந்தால் என்ன செய்வது? யார் பொறுப்பு? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்

மனுதாரர் தரப்பு கூறுகையில், “பைக் டாக்சிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பிற மாநிலங்களிலும் அனுமதி வழங்க ஆலோசனை வழங்கியுள்ளது. மாநில அரசு பைக் டாக்சிக்குத் தடை விதிக்க முடியாது ஒழுங்குமுறைபடுத்தலாம்” என வாதிட்டார்
இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “பைக் டாக்சிக்கு அனுமதி கொடுக்கலாமா? வேண்டாமா? என விரைவில் கொள்கை முடிவு எடுங்கள்“ என அறிவுறுத்தி இது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய போக்குவரத்துத் துறை செயலாளருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


