அரியலூர் மாவட்டம் வாரணவாசி கல்யாண சுந்தர விநாயகர்: வாழைப்பழ மாலை தரும் உத்தியோக யோகம்!

விநாயகரை வழிபட்டால் வேண்டும் வரங்கள் அனைத்தும் கிடைக்கும். அப்படிப்பட்ட விநாயகப்பெருமானின் கோயில் இல்லாத ஊர் ஏது?

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கோலத்தில் அருள்பாலிக்கும் விநாயகப்பெருமான் வாரணவாசியில் கல்யாண சுந்தர விநாயகராக அருள்பாலிக்கிறார்.

அரியலூருக்கு அருகில் அமைந்துள்ளது வாரணவாசி. இங்குள்ள அருள்மிகு கல்யாணசுந்தர விநாயகர் ஆலயம் பிரசித்திபெற்றது. உள்ளூரில் உள்ள பக்தர்கள் தங்களுக்கு ஏதேனும் குறையிருந்தால் இந்த விநாயகரிடம் வந்து முறையிடுகிறார்கள்.

அப்படி இவர் முன் வைத்த வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுகின்றன என்கிறார்கள் பக்தர்கள்.

வாரணவாசி கல்யாண சுந்தர விநாயகர் கோயில்

தஞ்சாவூர் சோழ மன்னனின் அரசவையில் கல்யாண சுந்தரம் என்பவர் குமாஸ்தாவாகப் பணிபுரிந்தார். அவர், ஆனை முகத்தோனின் தீவிர பக்தர். தினமும் விநாயகரைத் தன் மனத்தால் வழிபட்டுப் பின்பே தன் பணிகளில் ஈடுபடுவார்.

ஒருநாள் அவரது கனவில் தரிசனம் அருளிய விநாயகப்பெருமான்,

“என் தந்தையுடன் இணைந்த அம்சத்தில், வாரணவாசி கிராமத்தில் உசிலை மரத்தடியில் மண்ணுக்குள் நான் எழுந்தருளியிருக்கிறேன். என் திருவுருவச் சிலையைக் கண்டெடுத்து, அங்கு ஒரு கோயிலை எழுப்பிப் பிரதிஷ்டை செய்து வணங்கி வா. உனக்கு சகல செளபாக்கியமும் கிடைக்கும்” எனச் சொல்லி மறைந்தாராம்.

உடனே மெய்சிலிர்க்க கண் விழித்த கல்யாண சுந்தரம், விநாயகப்பெருமான் உரைத்த கட்டளையை நினைவுகூர்ந்து, வாரணவாசி கிராமம் நோக்கிப் பயணித்தார்.

ஓர் உசிலை மரத்தின் அடியில் தோண்டிப் பார்த்தார் கல்யாண சுந்தரம். சில அடிகள் தோண்டியதுமே விநாயகக் கடவுளின் திருமேனி தரிசனம் கிடைத்தது. உடனே அதை வெளிக்கொணர்ந்து ஊராரை அழைத்து வந்து வழிபாடுகள் செய்து மகிழ்ந்தார். கனவில் இறைவன் சொன்னது போலவே அந்த மரத்தின் அடியிலேயே விநாயகருக்கு ஓர் அழகிய திருக்கோயில் எழுப்பினார்.

குமாஸ்தா கல்யாண சுந்தரம் எழுப்பிய கோயில் என்பதால், இந்தத் தல இறைவனுக்கும் ’கல்யாண சுந்தர விநாயகர்’ என்றே திருநாமம் விளங்கிற்று.

கல்யாணசுந்தரத்தின் கனவில், இறைவன் தன் தந்தையுடன் இணைந்த அம்சத்தில் இருப்பதாகக் கூறியதை நினைவு கூர்ந்த கல்யாண சுந்தரம் ஊர் பக்தர்களுடன் இணைந்து ஒரு சிவலிங்க பீடத்தை எழுப்பி, அதன் மேல் விநாயகரைப் பிரதிஷ்டை செய்தார்.

2 குதிரைகள் இழுத்துச் செல்லும் தேரின் வடிவில் அமைக்கப்பட்டுள்ள சந்நிதியில் லிங்க பீடத்தில் கம்பீரமாக அமர்ந்து கருணை மழை பொழிகிறார் ஆனைமுகத்தோன்.

வாரணவாசி கல்யாண சுந்தர விநாயகர்
வாரணவாசி கல்யாண சுந்தர விநாயகர்

இவரை 12 வாரங்கள் தரிசித்து, 12-வது வாரம் வாழைப்பழ மாலை அணிவித்து வழிபட்டால் நல்ல வேலை கிடைக்கும், உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்த ஆலயத்தில் சிவபெருமான் விசாலாட்சி சமேத விஸ்வ நாதராக எழுந்தருளி அருள் பாலிக்கிறார். மேலும் சண்டிகேஸ்வரர், கால பைரவர், பாலமுருகன், குருததட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.

இந்த ஆலயத்தின் தல விருட்சங்களாக அமைந்துள்ளன அரசு மற்றும் வேம்பு மரங்கள். இந்த மரங்களின் அடியில் ராகு, கேதுவுடன் அமர்ந்து பக்தர்களுக்கு நல்லருள் புரிகிறார் கற்பகவிநாயகர்.

இந்தத் தலவிருட்சங்களில் மஞ்சள் கயிற்றில் விரலி மஞ்சள் சேர்த்து அமாவாசை அன்று கட்டி வழிபட திருமணத் தடைகள் விலகும் என்பது நம்பிக்கை. அதே போன்று மஞ்சள் துணியில் கோயில் வளாகத்தில் இருந்து ஒரு சிறிய கல்லை எடுத்து அதனுடன் வெற்றிலை பாக்கு வைத்து இம்மரத்தில் தொட்டில் போலக் கட்டினால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் பக்தர்கள் .

உள்ளூர் பக்தர்கள் தாங்கள் வாங்கும் புதிய வாகனங்களை இந்த ஆலயத்துக்குக் கொண்டுவந்து சாவியை விநாயகப்பெருமானின் பாதத்தில் வைத்துப் பூஜை செய்து வழிபடுகின்றனர்.

இங்கு சங்கடஹரசதுர்த்தி நாளில், கல்யாண சுந்தர விநாயகருக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. அந்த நாளில் அவருக்குப் பால் அபிஷேகம் செய்து, வெண் நிற வேஷ்டி, துண்டு சமர்ப்பித்து, ரோஜா மாலை சாத்தி, லட்டுப் பிரசாதம் நிவேதனம் செய்து, நெய்தீபம் ஏற்றி அறுகம்புல்லினால் அர்ச்சணை செய்து வழிபட்டால் நினைத்த காரியம் தடையில்லாமல் நிறைவேறி, வெற்றி கிடைக்கும் என்கிறார்கள் பலன் பெற்ற பக்தர்கள்.

இங்கு விநாயகர் சதுர்த்தி விமர்சையாகக் கொண்டாடப்படும். நான்கு கால பூஜைகளோடு மாலையில், விநாயகருக்குச் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு விசேஷ தீபாராதனையும் நடைபெறும். சதுர்த்தி நாளில் இங்கு வந்து கல்யாண சுந்தர கணபதியை வழிபட்டால் நம் கவலைகள் எல்லாம் தீரும் என்பது நம்பிக்கை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.