Quote of the Day: சரியான நேரத்திற்காகக் காத்திருக்காதீர்கள்! - மார்க் விக்டர் ஹேன்சன் சொன்னது

வாழ்க்கையில் நாம் அடிக்கடி சொல்லும் ஒரு வாக்கியம், "எல்லாம் சரியாகட்டும், அப்புறம் ஆரம்பிக்கலாம்" என்பதுதான். புதிய தொழில் தொடங்குவது, உடற்பயிற்சி செய்வது, ஒரு புத்தகம் எழுதுவது என எதுவாக இருந்தாலும், அதற்கான சரியான தருணம் வரும் என்று நாம் காத்துக்கொண்டே இருப்போம்.

ஆனால், இயற்கை அப்படிச் செயல்படுவதில்லை. குறைகள் இல்லாத ஒரு சூழ்நிலை வரவே வராது என்பதை உணர்த்தும் அற்புதமான பொன்மொழிதான் மார்க் விக்டர் ஹேன்சன் (Mark Victor Hansen) சொன்னது.

``Dont wait until everything is just right. It will never be perfect.’’

"எல்லாமே சரியாகும் வரை காத்திருக்காதீர்கள். அது ஒருபோதும் முழுமையாகச் சரியாக இருக்காது."

Quote of the Day: மார்க் விக்டர் ஹேன்சன்

இதை ஒரு குட்டிக் கதையுடன் பார்க்கலாம். கவினுக்குப் பல வருடங்களாக ஒரு நாவல் எழுத வேண்டும் என்ற ஆசை. ஆனால், அவன் எப்போதுமே நல்ல சூழ்நிலை அமையட்டும் என்று காத்திருந்தான்.

"எழுதுவதற்கு அமைதியான அறை வேண்டும், விலையுயர்ந்த லேப்டாப் வேண்டும், மனச்சோர்வு இல்லாத காலைப் பொழுது அமைய வேண்டும்" என்று தனக்குத் தானே நிபந்தனைகளை விதித்துக்கொண்டான்.

லேப்டாப் வாங்கிய பிறகு, "இப்போது மழைக்காலம், வானிலை சரியாக இல்லை, அடுத்த மாதம் ஆரம்பிக்கலாம்" என்றான். மாதங்கள் வருடங்களாக மாறின; கவின் ஒரு பக்கம்கூட எழுதவில்லை.

அதே நேரத்தில், அவனது நண்பன் முகிலன் தினமும் தான் வேலைக்குச் செல்லும் பேருந்துப் பயணத்தில், கையில் கிடைத்த ஒரு சிறிய நோட்டுப் புத்தகத்தில் எழுதத் தொடங்கினான். பேருந்துச் சத்தம், கூட்ட நெரிசல், வேலைப்பளு என எத்தனையோ குறைகள் இருந்தும் அவன் எழுதுவதை நிறுத்தவில்லை. ஓராண்டு கழித்து, முகிலன் தனது முதல் புத்தகத்தை வெளியிட்டான். கவின் இன்னும் சரியான நேரத்திற்காக தன் அறையில் காத்திருந்தான்.

இந்தக் கதை நமக்கு உணர்த்துவது மிக எளிமையான ஒரு உண்மையைத்தான். நீங்கள் ஒரு நீண்ட பயணத்தைத் தொடங்கத் திட்டமிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். "சாலையில் உள்ள அனைத்து சிக்னல்களும் பச்சை விளக்காக மாறிய பிறகுதான் நான் வீட்டை விட்டுப் புறப்படுவேன்" என்று சொன்னால், ஒருபோதும் பயணத்தைத் தொடங்கவே முடியாது.

Quote of the Day: மார்க் விக்டர் ஹேன்சன்
Quote of the Day: மார்க் விக்டர் ஹேன்சன்

பச்சை, மஞ்சள், சிவப்பு என அனைத்தும் கலந்ததுதான் பயணம். வழியில் தடைகள் வரும், சிக்னல்களில் நிற்க வேண்டி வரும், அதையெல்லாம் தாண்டித்தான் இலக்கை அடைய முடியும்.

சரியான நேரம் என்பது ஒரு மாயை. ஆகவே, உங்கள் கையில் இப்போது என்ன இருக்கிறதோ, அதை வைத்து, நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே தொடங்க வேண்டும். குறைகளுடனான ஒரு தொடக்கம், எக்காலத்திலும் தொடங்கப்படாத ஒரு முழுமையைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு சிறந்தது. நீங்கள் பயணிக்கத் தொடங்கிய பிறகுதான், சூழ்நிலைகள் தானாகவே உங்களுக்குச் சாதகமாக மாறத் தொடங்கும்.

நீங்கள் செய்ய நினைக்கும் அந்தச் செயலுக்கு இன்றே முதல் படியை எடுத்து வையுங்கள். சூழ்நிலை சரியாக இல்லை என்று தயங்காதீர்கள். உங்கள் முயற்சியும் உழைப்பும்தான் சூழ்நிலையை முழுமையாக்கும்.

எல்லாமே சரியாக இருக்கும் தருணம் என்று ஒன்று இல்லை; நீங்கள் தொடங்கும் இந்தத் தருணமே சரியானது! உற்சாகத்துடன் செயல்படுங்கள், வெற்றி நிச்சயம்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.