Madhavan: நூலகம் முதல் ஹைட்ரோபோனிக் தோட்டம் வரை! - மாதவன் வசிக்கும் ரூ. 17.5 கோடி மும்பை வீடு
பிரபலங்களின் வீடுகள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள எல்லோருக்கும் ஆர்வமிருக்கும். அதனால்தான் செலிபிரிட்டிகளின் ஹோம்டூர் வீடியோக்கள் எப்போதும் ட்ரெண்ட் ஆகும்.
அப்படிதான் மாதவனின் வீடு தியான அறை, நூலகம், இயற்கையை நேசிக்கும் ஹைட்ரோபோனிக் மாடித்தோட்டம் போன்ற தனித்துவமான அம்சங்களுடன் அமைக்கப்பட்டிருப்பது இணையத்தில் வைரலாகிவருகிறது.
நடிகர் மாதவனுக்கு, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸ் என்னும் பகுதியில் சுமார் ரூ. 17.5 கோடி மதிப்பிலான வீடு ஒன்று உள்ளது. பொதுவாகப் பிரபலங்களின் வீடுகள் என்றாலே அதிக பகட்டும், ஆடம்பரமும் நிறைந்திருக்கும். ஆனால் மாதவனின் வீடோ அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, அமைதியையும், இயற்கையையும் பிரதிபலிக்கும் வகையில் மிகவும் ரசனையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 4,182 சதுர அடியில் பரந்து விரிந்துள்ள இந்த வீடு 5 படுக்கையறைகளைக் கொண்டுள்ளது. அதிகப்படியான ஆடம்பரப் பொருட்களைத் தவிர்த்து, இயற்கையான மர வேலைப்பாடுகளும், கண்களை உறுத்தாத வெளிர் வண்ணங்களும் இந்த வீட்டிற்கு ஒரு இதமான தோற்றத்தைத் தருகின்றன.
View this post on Instagram
வரவேற்பறை (Living Room)
பாரம்பர்ய இந்தியக் கலைகளும் நவீன வடிவமைப்பும் கலந்த ஒரு கலவையாக இந்த அறை அமைந்துள்ளது. மரத்தால் ஆன டேபிள், பூக்கள் வரையப்பட்ட சோபா, அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையிலான அழகிய பாரம்பர்ய தஞ்சாவூர் ஓவியம் ஆகியவை இந்த அறையை அலங்கரிக்கின்றன. மேலும், டைனிங் டேபிள், நாற்காலிகளின் அடிப்பகுதிகள் தங்க நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தியான அறை (Meditation Room)
மும்பை போன்ற எப்போதும் பரபரப்பாக இயங்கும் ஒரு நகரத்தில், மன அமைதிக்காக வீட்டிற்குள்ளேயே ஒரு பிரத்யேக தியான அறையை வடிவமைத்துள்ளார். வீட்டின் பல இடங்களில் புத்தர் சிலைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.

நூலகம் (Private Library)
புத்தக வாசிப்பில் அதிக ஆர்வம் கொண்ட மாதவன், தனது வீட்டிற்குள் பல அறிய நூல்களைக் கொண்ட ஒரு தனிப்பட்ட நூலகத்தையும் அமைத்துள்ளார்.
குளியலறை
வீட்டின் குளியலறை முழுவதும் நட்சத்திர விடுதிகளில் இருக்கும் ஸ்பா போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிர் தந்த நிற சுவர்கள், கிரீம் நிற மார்பிள் தரைகள் என முழுவதும் வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாடித்தோட்டம்
வீட்டின் மற்ற அனைத்து அறைகளையும் விட அனைவரையும் ஈர்க்கும் ஒரு இடம் மாதவனின் மாடித்தோட்டம். மண்ணில்லாமல் தண்ணீரில் செடிகளை வளர்க்கும் ஹைட்ரோபோனிக் (Hydroponic) முறையில் காய்கறிகளையும் பழங்களையும் விளைவிக்கிறார்.
கத்திரிக்காய், தக்காளி, வெள்ளரி, வெண்டைக்காய், ப்ரோக்கோலி போன்ற பல்வேறு காய்கறிகளை அவர் எந்தவொரு ரசாயனப் பொருட்களும் இல்லாமல் முழுவதும் இயற்கை முறையில் விளைவிக்கிறார். வழக்கமான விவசாயத்திற்குத் தேவைப்படும் தண்ணீரில் வெறும் 1/20 பங்கு தண்ணீர் மட்டுமே இந்த முறைக்குப் போதுமானது என்பது இதன் சிறப்பம்சம்.
பச்சைப் பசேலென இருக்கும் செடிகளுக்கு நடுவே ஒரு புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஓய்வு நேரங்களில் குடும்பத்துடன் அமர்ந்து இயற்கையை ரசிக்க வசதியாக ஊஞ்சல் மற்றும் நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பல கோடிகள் மதிப்புள்ள வீடு என்றாலும், எந்தவொரு தேவையற்ற பகட்டும் இல்லாமல், மிகவும் நேர்த்தியாக மாதவன் இந்த வீட்டை வடிவமைத்துள்ளார். இயற்கை, எளிமை, மன அமைதி ஆகியவற்றின் மீது அவருக்கு இருக்கும் அதீத காதலை இந்த வீடு முழுமையாகப் பிரதிபலிக்கிறது.
நகரத்தின் பரபரப்பிலிருந்து தப்பித்து, இயற்கையோடு இயைந்த ஒரு வாழ்க்கையை வாழ நினைப்பவர்களுக்கு மாதவனின் இந்த வீடு ஒரு சிறந்த முன்னுதாரணம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

