திருப்பரங்குன்றம்: உடனே தீபம் ஏற்ற இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! – உச்ச நீதிமன்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரிய வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாகச் செயல்படுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாக மறுத்துவிட்டது.

நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அடங்கிய அமர்வு முன் நடைபெற்ற இந்த விசாரணையில், மனுதாரர் தரப்பு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் முன்வைக்கப்பட்ட காரசார வாதங்களைத் தொடர்ந்து வழக்கு 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதங்கள் நடைபெற்றது.

உச்ச நீதிமன்றம்

முக்கிய அம்சங்கள் & உச்ச நீதிமன்ற வாதங்கள்:

"முன்னர் நடைமுறையில் இல்லாத ஒரு புதிய விஷயத்தை உயர் நீதிமன்ற உத்தரவு மூலம் புகுத்தப் பார்க்கிறார்கள்" என அறநிலையத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

ஜனவரி மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இத்தனை நாட்கள் மேல்முறையீடு செய்யாமல் தமிழ்நாடு அரசு என்ன செய்து கொண்டிருந்தது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஆவணங்களை மொழிபெயர்ப்பு செய்ய வேண்டியிருந்ததால் காலதாமதம் ஏற்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

"வழக்கை முழுமையாக விசாரித்த பிறகே உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்; தற்போதைய நிலையில் எந்தவொரு தடை அல்லது இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது" என நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

எதிர்மனுதாரர் ராம ரவிக்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை காவல் ஆணையர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கு 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அமர்வை அணுகத் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.