மீண்டும் ஒன்று சேரலாம் வா... - விவாகரத்தான மனைவியை அழைத்துச் சென்று கொன்று புதைத்த கணவன்!
பஞ்சாப் மாநிலம், பாசில்கா மாவட்டத்தைச் சேர்ந்த சரோஜ் (42) என்ற பெண் தனது கணவர் குர்மீத் சிங்கிடமிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்று தனது பெற்றோருடன் வசித்து வந்தார். குர்மீத் சிங் திடீரென தனது முன்னாள் மனைவியிடம் பேசி மீண்டும் சேர்ந்து வாழலாம் என்றும், சமரசம் பேச நேரில் வருமாறு கேட்டுக்கொண்டார். அவரது பேச்சை நம்பிய சரோஜ் அவர் அழைத்த இடத்திற்கு சென்றார். பாசில்கா மாவட்டத்தில் உள்ள ஜண்ட்வாலா மீரா சங்லா கிராமத்தில் புதர்களுக்கு அருகில் உள்ள ஒதுங்கிய பகுதிக்கு குர்மீத் தனது முன்னாள் மனைவியை அழைத்துச் சென்றார்.
அங்கு கூரிய முனைகள் கொண்ட ஆயுதத்தால் சரோஜை கொன்றுவிட்டு உடலை வயல்வெளியில் புதைத்துவிட்டார். இக்கொலையின் போது சரோஜ் சத்தம் கேட்டு அருகில் ஆடு மேய்க்கும் ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் வருவதை பார்த்த குர்மீத் அவசர அவசரமாக சரோஜ் உடலை புதைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். ஆடு மேய்ப்பவர் இது குறித்து கிராம மக்களுக்கு தகவல் கொடுத்தார். உடனே கிராம மக்கள் போலீஸாரின் துணையோடு சரோஜ் உடலை தோண்டி
எடுத்தனர். அதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் பின்னர் கைது செய்யப்பட்டார். கொலை செய்யப்படுவதற்கு முன்பு இரண்டு பேரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தனர். அவர்கள் ஒற்றுமையாக இருப்பது போன்று காட்டிக்கொண்டனர். கைது செய்யப்பட்ட குர்மீத்திடம் என்ன காரணத்திற்காக கொலை செய்தார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


